1993-ம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் அரச வழக்கறிஞர்கள் வலியுறுத்திய அடுத்த நாளில் அவர் உயிரிழந்தார்.
மும்பைக்கு ஆயுதங்கள் கடத்தியதாக முஸ்தஃபா டோஸா மீது குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் 257 பேர் கொல்லப்பட்டனர், இச்சம்பவங்கள் நடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கலவரத்தில் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பழிவாங்கும் நடவடிக்கை என்றும் இது கூறப்பட்டது.
மும்பை பங்குச் சந்தை, தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியாவின் அலுவலகங்கள் மற்றும் ஒரு ஆடம்பர ஹோட்டல் உட்பட பன்னிரெண்டு இடங்களை இலக்காக வைத்து தாக்குதல் நடத்தப்பட்டது.
கடந்த புதன்கிழமையன்று தனக்கு கடுமையான மார்பு வலி ஏற்பட்டுள்ளதாக டோஸா கூறியதை அடுத்து, சிறைச்சாலை மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டதாக இந்திய ஊடக செய்திகள் கூறுகின்றன.
கடந்த 2015-ம் ஆண்டு இதே மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தின் மற்றொரு குற்றவாளியான யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்டார். ஆனால், அவரை விட இந்த சம்பவத்தின் `மூளையாக` செயல்பட்ட டோஸாதான் மிகப்பெரிய குற்றவாளி என்று இந்திய வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
இந்த மாதத்தின் தொடக்கத்திலேயே அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டாலும், அவருக்கான தண்டனை விவரத்தை நீதிமன்றம் வெளியிடவில்லை.
இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மற்ற ஆறு பேருடன் சேர்த்து டோஸாவின் பங்கு குறித்தும் தனித்தனியாக விசாரிக்கப்பட்டது.
யாகூப் மேமன் மீதான விசாரணை முடிவடைந்த நிலையில், 2003 முதல் 2010-ம் ஆண்டு வரை கைது செய்யப்பட்ட ஏழு பேர் மீதான விசாரணை தனித்தனியாக நடைபெற்றது.
கைது செய்யப்பட்ட ஏழுபேரில் ஒருவர் விடுதலை செய்யப்பட்டார். மற்ற ஆறு பேரும் குற்றவியல் சதி மற்றும் கொலை குற்றத்தில் ஈடுபட்டதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
•மார்ச் 1993 : தொடர் குண்டு வெடிப்புகளால் 257 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 713 பேர் காயமடைந்தனர்.
•ஆகஸ்ட் 2003 : நான்கு வெடிகுண்டு தாக்குதலில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
•ஜூலை 2006 : நெரிசல் மிகுந்த ரயிலில் 11 நிமிடத்திற்குள் ஏழு குண்டுகள் வெடித்த சம்பவத்தில் 180-க்கும் மேற்பட்ட நபர்கள் கொல்லப்பட்டனர் ; மேலும் நூற்றுக்கணக்கான நபர்கள் காயமடைந்தனர்.
•நவம்பர் 2008 : இரண்டு ஆடம்பர ஹோட்டல்கள், நகரின் முக்கியமான ரயில் நிலையம், ஒரு உணவகம் மற்றும் யூத மையம் உட்பட ஏழு முக்கியமான இடங்களில் துப்பாக்கிய ஏந்திய ஆயுததாரிகள் நடத்திய தொடர் தாக்குதலில் 165 பேர் கொல்லப்பட்டனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த போராளிகள்தான் காரணம் என்று குற்றம்சாட்டப்பட்டது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான அமைதி பேச்சு வார்த்தைக்கான முயற்சிகள் தடம் புரண்டன. இத்தாக்குதலில் ஈடுபட்டதாக பாகிஸ்தானைச் சேர்ந்த முகமது அஜ்மல் அமிர் காசப் உயிருடன் பிடிக்கப்பட்டு பின்னர், 2012 நவம்பரில் தூக்கிலிடப்பட்டார்.
•ஜூலை 2011 : மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் மாலை வேளையில் ஒரே நேரத்தில் அருகருகே நடைபெற்ற மூன்று குண்டு வெடிப்புகளில் 18 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 131 பேர் காயமடைந்தனர்.