குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டத்தில் ‘கிர்’ வனப்பகுதியில் சிங்கங்கள் வாழ்கின்றன.
நாட்டிலேயே இந்த வனப்பகுதியில் மட்டுமே சிங்கம் உள்ளது. இந்த வனப்பகுதியையொட்டியுள்ள கிராமங்களில் மக்கள் வசிக்கிறார்கள்.
கடந்த புதன்கிழமை இரவு லுன்சாபூர் கிராமத்தைச் சேர்ந்த மன்குபென் மக்வானா என்ற 32 வயது கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனே ஆம்புலன்ஸ் வரவழைத்தனர்.
அதிகாலை 2.30 மணியளவில் ஆம்புலன்ஸ் சென்றது. கர்ப்பிணி மக்வானாவை ஏற்றிக்கொண்டு வனப்பகுதி வழியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்று கொண்டு இருந்தது.
அப்போது திடீர் என்று சிங்கங்கள் சாலையில் நடமாடியது தெரிந்தது. உடனே டிரைவர் ஆம்புலன்சை நடுவழியில் நிறுத்தி விட்டார்.
சிங்கங்கள் ஆம்புலன்சை நோக்கி வந்து சூழ்ந்து கொண்டன. மொத்தம் 12 சிங்கங்கள் இருந்தன.
இதனால் ஆம்புலன்சில் இருந்த டிரைவர் மற்றும் ஊழியர்களும் கர்ப்பிணியின் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்தனர்.
இந்த சமயத்தில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
ஆம்புலன்சில் இருந்த ஊழியர்கள் ஆஸ்பத்திரியுடன் தொடர்பு கொண்டு டாக்டர்களின் அறிவுரைப்படி பிரசவம் பார்த்தனர். 25 நிமிட போராட்டத்துக்குப் பின் குழந்தை பிறந்தது.
தாய்க்கும், குழந்தைக்கும் தேவையான முதல் உதவி சிகிச்சைகள் மேற்கொண்டனர்.
அதன் பிறகு டிரைவர் ஆம்புலன்ஸ்சை ‘ஸ்டார்ட்’ செய்தார். சத்தம் கேட்டு சிங்கங்கள் ஒதுங்கிக்கொள்ள ஆரம்பித்தன.
சாலையில் ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்பட்டதும் புறப்பட்டுச் சென்றது. பின்னர் ஜப்ரா பாத் ஆஸ்பத்திரியில் தாயும் குழந்தையும் அனுமதிக்கப்பட்டனர்.
இது திகிலுட்டும் அனுபவமாக இருந்தது என்று ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.
சிங்கங்களுக்கு மத்தியில் குழந்தை பெற்றதை வாழ்நாளில் மறக்க முடியாது என்று மக்வானா தெரிவித்தார்.
இந்தப்பகுதியில் அடிக்கடி இது போன்று சிங்கங்கள் வழிமறிப்பதாகவும், இந்த சமயத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் தெரிவித்தனர்.