சொந்தமாக தொழில் செய்து வரும் நாயகன் அகில், நாயகி நயனாவை காதலித்து வருகிறார். இவர்களது காதலுக்கு நயனாவின் அம்மா மற்றும் அப்பா டெல்லி கணேஷ் சம்மதம் தெரிவிக்கின்றனர். ஒருநாள் நயனாவின் பெற்றோர் வெளியூர் செல்ல, வீட்டில் தனியாக இருக்கும் நயனா, அகிலை துணைக்கு அழைக்கிறாள். இவ்வாறு நயனா வீட்டிற்கு செல்லும் அகில், நயனா இருவரும் வேறு வேறு அறைகளில் தங்குகின்றனர். அடுத்த நாள் காலை, நயனா குளிப்பதை தனது மொபைலில் வீடியோ எடுத்து அதனை நயனாவிடம் காண்பிக்கிறார்.
அந்த வீடியோவை பார்த்து அகில் மீது கோபமடையும் நயனா, அதனை அழிக்க சொல்ல, அகில் வீடியோவை அழித்து விடுகிறார். ஆனால் தனது வீட்டிற்கு சென்று அந்த வீடியோவை ரெக்கவரி போட்டு எடுத்து விடுகிறார். இந்நிலையில், அகிலின் போன் தொலைந்து போகிறது. மற்றொரு நாயகனான சரணிடம் சிக்கும் அந்த போனை தரச்சொல்லி அகில், அவரை மிரட்டுகிறார்.
இதனால் கோபமடையும் சரண், போனில் ஏதேனும் இருக்குமோ என்று சந்தேகித்து, போனில் என்ன இருக்கிறது என்று பார்க்கிறார். இதில் நயனாவின் குளியல் வீடியோ இருக்க, காதலியை இப்படி வீடியோ எடுத்திருக்கிறாயே என்று சரண், அகிலை விமர்ச்சிக்கிறார். இதையடுத்து, சரண் என்ன சொன்னாலும் தான் செய்யத் தயாராக இருப்பதாக அகில் கூற, அவருக்கு தண்டனையாக சமூகத்தில் இவரை போன்று தவறுகள் செய்யும் சிலரை அகில் மூலமாக சரண் பாடம் புகட்டுகிறார்.
இதில் அமைச்சர் ஒருவரை பொதுமேடையில் செருப்பால் அடிக்க வேண்டும் என்கிறார். சரணின் பேச்சை கேட்டு அகிலும், அமைச்சரை செருப்பால் அடித்துவிட்டு, பின்னர் அமைச்சரை தனியாக சந்தித்து, மொபைல் தொலைந்தது முதல், அதில் இருக்கும் வீடியோ வரை அனைத்தையும் கூறி மன்னிப்பு கேட்கிறார். அந்தநேரம் பார்த்து, அமைச்சரை சந்தித்து பேசும் நயனா, தான் அகிலை காதலிப்பதாக அவரது போட்டோவை காட்ட அமைச்சர் கோபத்தின் உச்சிக்கே செல்கிறார். மேலும் அகில் கூறிய அனைத்தையும் நயனாவிடம் சொல்லிவிடுகிறார்.
பின்னர் நயனாவை சந்திக்கும் அகிலிடம், அந்த அமைச்சர் தான் தனது அண்ணன் என்று நயனா கூற அகில் அதிர்ச்சி அடைகிறார். இதுஒருபுறம் இருக்க சரண் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் அகில், தனது நண்பர்கள் உதவியுடன் அவரை அடித்து, உதைத்து கடலில் தூக்கி எறிந்து விடுகிறார்.
இந்நிலையில், நயனா காணாமல் போக, அமைச்சரின் உத்தரவால் போலீஸ் அதிகாரிகளான அசோகன், சோனியா அகர்வால், அகிலை கைது செய்கின்றனர். இந்த விசாரணையில் நடந்தது அனைத்தையும் அகில் போலீசிடம் கூறுகிறார். இந்நிலையில், கடலில் தூக்கி எறிந்த அந்த நபரும் திரும்ப வர, அந்த நபர் எப்படி உயிருடன் வந்தார்? அகில் – நயனாவின் காதல் வெற்றி பெற்றதா? நயனாவின் அண்ணனின் எதிர்ப்பை மீறி இருவரும் இணைந்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் அகில், நயனா நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும் காட்சிகள் பார்பதற்கு ரசிக்கும்படியாக இல்லை. நடிகர் அசோகன் படத்திற்காக சிறப்பு உடற்பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார். அது படத்தை பார்க்கும் போதே தெரிகிறது. அவரது உழைப்புக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம். சமீபகாலமாக படவாய்ப்புகள் அமையாததால், கிடைக்கும் வேடத்தில் நடத்து வரும் சோனியா அகர்வால், இப்படத்தில் ஒரு போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். இதற்கு முன்னதாக சாயா படத்திலும் சோனியா போலீஸாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் காட்சிக்கு ஏற்ப ஆங்காங்கே வந்து செல்கிறது.
திட்டமிட்டு செயல்படுவதிலும், செயல்படுத்துவதிலும் இளைஞர்கள் புத்திசாலிகள் என்றாலும், விளைவுகள் பற்றி தெரியாமல் இறங்கி சிரமப்படும் இளைஞர்கள் சிலரும் உண்டு. இது போல் சின்ன தவறுதானே செய்கிறோம். அதனால் என்ன பெரிதாக வந்து விட போகிறது என்று நினைத்து இளைஞன் ஒருவன் செய்த தவறால் அவன் என்ன சிக்கலில் மாட்டுகிறான். அவனது வாழ்க்கையில் என்னென்ன நடந்தது? என்பதை படமாக இயக்கி இருக்கிறார் நட்டி குமார்.
ஃபெடோ பேட்டின் பின்னணி இசை படத்திற்கு ஓரளவு பலத்தை கூட்டியிருக்கிறது. அருண் பிரசாத்தின் ஔிப்பதிவு சுமார் ரகம் தான். படம் பார்பதற்கான மனநிலையே இல்லாமல், சீரியல் தொகுப்புகளை இணைத்து பார்த்தால் எப்படி இருக்குமோ, அந்த சிந்தனையே இருக்கிறது.
மொத்தத்தில் `எவனவன்’ சொல்ல முடியவில்லை.