இஸ்ரேலுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றிருக்கும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, ஜெருசலேம் நகரில் ஒரு சிறுவனுடன் சிறப்பு சந்திப்பை மேற்கொண்டார்.
2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் தனது பெற்றோரை இழந்த யூத சிறுவன் ‘மோஷே’ தான் பிரதமர் சந்தித்த சிறப்பு விருந்தினர். 2008 ஆம் ஆண்டு தீவிரவாதிகள் யூதர்களின் சபாத் இல்லத்தை தாக்கியபோது, குழந்தை மோஷே, தனது பராமரிப்பாளரால் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டான்.
இப்போது 11 வயதாகும் மோஷே, இஸ்ரேலின் அஃபூலாவில் தனது தாத்தா, பாட்டியோடு வசிக்கிறான்.
ஜெருசலேமில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியின் முன்னிலையில், மோஷே, நரேந்திர மோதிக்கு தான் எழுதிய கடிதத்தை வாசித்தான்.
”டியர் மிஸ்டர் மோதி, நான் உங்களையும், இந்தியாவையும் நேசிக்கிறேன். எனக்கு விளையாட பிடிக்கும். ஒரு நல்ல மாணவனாக இருக்க முயற்சி செய்கிறேன். ப்ளீஸ், நான் உங்களை நேசிப்பதைப் போலவே என்னையும் நீங்கள் நேசியுங்கள். நான் மும்பை வருவேன் என்று நம்புகிறேன்…”
சிறுவனின் அன்பில் நெகிழ்ந்த பிரதமர் மோதி, மோஷே எப்போது வேண்டுமானாலும் இந்தியாவிற்கு வரலாம் என்று நம்பிக்கையூட்டினார்.
சிறுவனை சந்திப்பதற்கு முன்னதாக பிரதமர் நரேந்திர மோதி, இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை சந்தித்தார். சந்திப்பிற்கு பிறகு பேசிய மோதி, ”மேற்கு ஆசிய நிலைமை மற்றும் ஒட்டுமொத்த பிராந்திய நிலைமை குறித்து விவாதித்தோம்”. ”இந்தியா சமாதானம், பேச்சுவார்த்தை, நிதானப்போக்கில் நம்பிக்கைக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்தார்.
”வன்முறை மற்றும் தீவிரவாத அச்சுறுத்தல்களை இந்தியா எதிர்கொண்டுள்ளது. இரு நாடுகளின் உத்திசார் நலன்களை பாதுகாக்க ஒப்புக் கொள்ளப்பட்டது. இரு நாடுகளும் தொழில்துறை ஆராய்ச்சி, வளர்ச்சி மற்றும் புத்தாக்க முயற்சிகளுக்காக $ 4 மில்லியன் நிதியத்தை உருவாக்க இணங்கியுள்ளன” என்று பிடிஐ செய்தி முகமை கூறுகிறது.