மத்திய ரெயில்வேயின் மெயின் வழித்தடத்தில் உள்ள காட்கோபர் ரெயில் நிலையத்தின் கல்யாண் நோக்கி செல்லும் ஸ்லோ வழித்தடத்தில் சம்பவத்தன்று காலை 10.20 மணியளவில் மின்சார ரெயில் ஒன்று வந்து கொண்டிருந்தது.
அப்போது 1-ம் எண் பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த பெண் ஒருவர் திடீரென தண்டவாளத்தில் குதித்தார். வேகமாக வந்த அந்த ரெயிலின் நான்கு பெட்டிகள் அந்த பெண்ணை கடந்து சென்று நின்றது.
இந்த திகில் காட்சியை பிளாட்பாரத்தில் நின்ற மற்ற பயணிகள் பார்த்து பதறி போனார்கள்.
ரெயில் முன் பாய்ந்த அந்த பெண் அடிபட்டு பலியாகி இருப்பார் என கருதினார்கள். தகவல் அறிந்து பணியில் இருந்த ரெயில்வே போலீசாரும் ஓடிவந்தனர். அவர்கள் ரெயில் புறப்பட்டு சென்றதும் உடலை மீட்பதற்காக தயார் நிலையில் நின்றனர். ஆனால் அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.
ரெயில் கிளம்பி சென்ற பின்னர் தண்டவாளத்தில் பார்த்தபோது அந்த பெண்ணை காணவில்லை. அவரது உடல் ரெயில் சக்கரத்திலேயே சிக்கி இழுத்து செல்லப்பட்டு விட்டதோ என அனைவரும் குழம்பினார்கள்.
தண்டவாளத்திலும் ரத்தம் எதுவும் தென்படவில்லை. உடனடியாக போலீசார் ரெயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சியை பார்வையிட்டனர். அப்போது தண்டவாளத்தில் மின்சார ரெயில் முன் குதித்த அந்த பெண் ரெயிலில் அடிபடாமல் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது தெரியவந்தது.
தண்டவாளத்தின் மத்தியில் படுத்தபடி கிடந்த அந்த பெண் கண் இமைக்கும் நேரத்தில் தண்டவாளத்தில் இருந்து வெளியே வந்து 2-ம் எண் பிளாட்பாரத்தில் ஏறி அங்குள்ள நடைமேம்பாலம் வழியாக ரெயில் நிலையத்தை விட்டு வெளியே செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இந்த காட்சிகளை பார்த்து ரெயில்வே போலீசார் மெய்சிலிர்த்து போனார்கள். இருப்பினும் தற்கொலை முயற்சியில் மின்சார ரெயில் முன் பாய்ந்த அந்த பெண் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.