டெல்லியில் உள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணிபுரிகிறார் ஸ்ரீதேவி. அத்னான் சித்திக் ஸ்ரீதேவியை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்கிறார். இதில் முதல் மனைவிக்கு பிறந்த மகள் தான் சாஜல் அலி. சாஜலும் ஸ்ரீதேவி வேலை பார்க்கும் பள்ளியிலேயே படிக்கிறாள். ஸ்ரீதேவிக்கும் ஒரு மகள் இருக்கிறாள். எனினும் சாஜல் அலியை, தன் மகளாக பார்க்கிறார் ஸ்ரீதேவி. ஆனால் ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக் கொள்ள சாஜல் அலி மறுக்கிறாள். மாறாக ஸ்ரீதேவியை மேம் என்றே அழைக்கிறாள்.
இவ்வாறாக நாட்கள் மெல்ல கடந்து செல்ல, தன்னுடன் படிக்கும் தோழியின் விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்க சாஜல் அலி செல்கிறாள். இந்நேரம் பார்த்து வேலை விஷயமாக அத்னான் சித்திக் வெளியூர் சென்று விடுகிறார். இரவு வெகு நேரமாகியும் சாஜல் வராததால் ஸ்ரீதேவி நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு நேரில் சென்று பார்க்க, சாஜல் அங்கு இல்லை. சாஜலுடன் படிக்கும் சக மாணவன், அவனது நண்பர்கள் இணைந்து சாஜலை கடத்திக் கொண்டு போய் கற்பழித்து விடுகின்றனர்.
இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரியாக நவாசுதீன் சித்திக் வருகிறார். அவரது பிரயாசையின் பேரில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார். சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றாவாளிகள் அனைவரும் இந்த வழக்கில் இருந்து தப்பித்து விடுகின்றனர்.
தன்னை இந்த நிலைமைக்கு ஆழ்த்தியவர்களுக்கு தண்டனை வாங்கித் தர முடியவில்லையே என்று சாஜல் மனக் கஷ்டத்தில் குமுறுகிறாள். மகளின் இந்த நிலைமையை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்ரீதேவி, குற்றவாளிகளை பழிவாங்க வேண்டும் என்று முடிவு செய்கிறாள். அதன்படி துப்பறிவாளரான அக்ஷய் கண்ணாவின் உதவியுடன், குற்றவாளிகளை ஸ்ரீதேவி எப்படி பழிவாங்குகிறார்? எந்த மாதிரியான அவர்களுக்கு தண்டனை வழங்கினார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? சாஜல் அலி, ஸ்ரீதேவியை அம்மாவாக ஏற்றுக் கொண்டாளா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் ஒரு தாயாகவே வாழ்ந்திருக்கிறார் ஸ்ரீதேவி. பள்ளியில் ஆசிரியராகவும், வீட்டில் அம்மா, மனைவி என ஒரு குடும்ப பெண்ணாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தனது மகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பழிவாங்குவதிலும், அதற்கான முடிவுகளை எடுப்பதிலும் ஸ்ரீதேவியின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது.
பாகிஸ்தானின் பிரபல நடிகரான அத்னான் சித்திக் ஒரு தந்தையாக யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கதையின் ஓட்டத்திற்கே அச்சாணியான சாஜல் அலி, ஸ்ரீதேவியை எதிர்க்கும் மகளாகவும், தனக்கு இழைக்கப்பட்ட கொடூரத்தால் மனம் குறுகி கஷ்டப்படுவதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். பாகிஸ்தானச் சேர்ந்த இவரை திரையில் பார்க்க ரசிக்கும்படி இருக்கிறது.
நவாசுதீன் சித்திக் ஒரு போலீஸ் அதிகாரியாக, தான் செய்ய வேண்டிய கடமையை சரிவர செய்கிறார். அதேநேரத்தில் குற்றாவாளிகளை கண்டுபிடிப்பதிலும், அவர்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்கவும் அவர் எடுக்கும் முயற்சியும் சிறப்பாக உள்ளது. அக்ஷய் கண்ணா படத்தின் போக்குக்கு ஏற்ப வந்து சென்றாலும், அவர் வரும் காட்சிகள் ரசிக்கும்படியாக இருக்கிறது. குறிப்பாக அவரது வசனங்கள் படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது.
டெல்லியில் நடந்த நிர்பயா கற்பழிப்பு சம்பவத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த நவீன காலத்தில், பெண்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றி வருவது அவர்களுக்கு பாதுகாப்பாக அமையாது. எந்த நேரத்திலும் பெண்கள் பிரச்சனையில் சிக்கிக் கொள்ளும் சந்தர்பங்கள் உருவாகலாம். இவ்வாறு பெண்களுக்கு இளைக்கப்படும் குற்றச் செயல்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும். சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி குற்றவாளிகளை தப்பிக்க விடக்கூடாது. மேலும் அத்தகைய நபர்களுக்கு தண்டனையை கடுமையாக்க வேண்டும்.
இவ்வாறு ஒரு குடும்பத்தில் உள்ள ஒரு பெண் குற்றச் செயலுக்கு ஆளாக்கப்பட்டால், அந்த குடும்பம் என்னென்ன பிரச்சனைகளை சந்திக்கும். அந்த பெண்ணின் குடும்பத்தார் எந்தளவுக்கு பாதிப்பிற்கு உள்ளாகின்றனர் என்பதை படத்தின் மூலமாக விளக்கியிருக்கும் ரவி உதயவாரின் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஆனால் படத்தை பார்க்க, ஒரு ஆவணப்படத்தை பார்த்த அனுபவமே இருக்கிறது. அந்தளவுக்கு படத்தின் திரைக்கதை மெல்ல செல்கிறது. மற்றபடி படம் ஒரு நல்ல செய்தியை எடுத்துரைக்கிறது.
இவ்வாறாக மெதுவாக நகரும் திரைக்கதையை ஏ.ஆர்.ரகுமானின் இசையில் பார்க்கும் போது, பொறுமையாக பார்க்க முடிகிறது. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். அனய் கோஸ்வாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கிறது.
மொத்தத்தில் `மாம்’ பொறுமையானவள்.