ஐதராபாத் நகரில் போதை பொருள் விற்பனையை தடுக்க சிறப்பு விசாரணை குழு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தனர்.
இதில் கோவாவில் இருந்து ஐதராபாத்துக்கு போதை பொருள் கடத்தி வந்து விற்ற தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த கெலினை கைது செய்தனர். அவனது கூட்டாளிகளும் சிக்கினர்.
இவர்கள் போதை பொருளை கல்லூரி மாணவர்கள், திரையுலக பிரமுகர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த நிலையில் போதை பொருள் விற்பனை தொடர்பாக குண்டுஅனிஷ், ரித்துவல் அகர்வால் ஆகிய 2 பேர் சிக்கினர். இவர்கள் இணையதளம் மூலம் போதை பொருளை விற்று உள்ளனர். இதையடுத்து இவர்களை யார்- யாரெல்லாம் தொடர்பு கொண்டார்கள் என்ற தகவல்களை சேகரித்தனர்.
இதில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த 3 இளம் கதாநாயகர்கள்,
2 தயாரிப்பாளர்களின் மகன்கள், ஒரு வளர்ந்து வரும் நடிகர்,
4 இயக்குனர்கள், 2 நடிகைகள் என 11 பேர் தொடர்பு கொண்டது தெரியவந்தது.
மேலும் சர்வதேச போதை கும்பல் தலைவர் கெலினுடன் தெலுங்கு சினிமா துறையை சேர்ந்த 50 பேர் தொடர்பில் இருந்ததும் அம்பலமாகி இருக்கிறது.
போதை பொருள் கும்பலுடன் தொடர்பு பற்றி சிறப்பு விசாரணை குழு முன்பு ஒரு வாரத்துக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று நடிகர்-நடிகைகள், இயக்குனர்கள் உள்பட 11 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
ஆனால் அவர்களது பெயர் விவரங்களை வெளியிட அதிகாரிகள் மறுத்து விட்டனர். அவர்களிடம் போதை பொருள் கும்பலுடன் எந்த மாதிரியான தொடர்பு என்று விசாரிக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும் 35 பேருக்கு நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த விவகாரம் தெலுங்கு திரையுலகில் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.