‘நேற்று, இன்று, நாளை’ என்கிற இசை சுற்றுப்பயணத்தின் முதல் நிகழ்ச்சி ஜுலை 8-ல் லண்டனில் நடைபெற்றது.
இந்த இசை நிகழ்ச்சியில் தமிழ்ப் பாடல்கள் அதிகமாகப் பாடப்பட்டதாகவும், அதனால் சிலர் வெளியேறியதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில், இசை நிகழ்ச்சி தொடர்பான சர்ச்சகைளுக்கு ரஹ்மான் சகோதரி ரெஹானா கூறியதாவது:
நீங்கள் நினைப்பது போன்று அங்கு எதுவும் நடைபெறவில்லை. ஆனால் ட்விட்டரில் தான் இதை சர்ச்சையாக்கி வருகின்றனர்.
அப்படி எதுவும் நடந்திருந்தால் நான் கண்டுபிடித்து இருப்பேன்.
ஏனென்றால் நான் ரசிகர்களை தொடர்ந்து கவனிப்பேன்.
எனக்கு தெரிந்து ஒரு குழு எழுந்து ‘ஹம்ம ஹம்மா’ பாடலுக்கு ஆட்டம் போட்டதை மட்டும் தான் பார்த்தேன்.
நிகழ்ச்சியை புறக்கணித்து அப்படி யாரும் வெளியேறி விடவில்லை.
இவர்கள் கூறுவது போல் அங்கு குழுமியிருந்த 10,000 பேரில் 10 பேர் மட்டும் வெளியேறினால் எங்களுக்கு எப்படித் தெரியும்.
அப்படியே அது நடந்ததா என்பதும் கேள்விக்குறிதான். அல்லது பொய் கூறுகிறார்களா என்றும் தெரியாது.
அப்படியே அந்த 10 பேர் வெளியேறினாலும், அவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு கூட சென்றிருக்கலாம்.
உண்மையை கூற வேண்டுமென்றால், நிகழ்ச்சி விரைவில் முடிந்துவிட்டது,
இன்னும் இருந்தால் நன்றாக இருக்கும் என்பது போன்றுதான் அங்கிருந்தவர்களின் மனநிலையாக இருந்தது.
இசை என்பது சர்வதேச மொழி. ஒரு ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் கூட ரஹ்மான் இசையை ரசிக்க முடியும். ஒரு சில வெளிநாட்டவர்களும் குழுவாக வந்திருந்தனர்.
அவர்களுக்கு அங்கு நடப்பது தமிழ், ஹிந்தி பாடல்கள் என்று எந்த மொழியும் தெரியாது. ஆனாலும் இசையை ரசித்தனர்.
இந்த இசை நிகழ்ச்சியின் தலைப்பே மிகத் தெளிவாக உள்ளது. அப்படி என்றால் தமிழர்கள் கூட ஹிந்தி பாடல்கள் பாடுகிறார்கள் என்று குற்றஞ்சாட்டியிருக்கலாம்.
இதுபோன்று சர்ச்சைகளை ஏன் உருவாக்குகிறார்கள் என்று தெரியவில்லை.
இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளதா என்றும் தெரியாது.
அங்கு வந்த யாரும் எதுவும் செய்யவில்லை.
இதன்மூலம் ஏதோ புது சர்ச்சையை உருவாக்க நினைக்கிறார்கள். அங்கு நடைபெறாத ஒன்றை நடப்பதாக கற்பனை செய்து கூறுகிறார்கள்.
மொழியை கடந்து இருப்பவர்கள் தான் இசைக் கலைஞர்கள். இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதையும் இசையால் இணைக்க வேண்டும் என்று விரும்புகிறவர், இலக்கு வைத்திருப்பவர் தான் ஏ.ஆர்.ரஹ்மான் என்று விளக்கமளித்தார்.