2009 – 2014-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த் திரைப்படங்களுக்கான விருதுகளை தமிழக அரசு சமீபத்தில் அறிவித்தது.
ஒருபக்கம் விருதுகளைப் பெற்றுள்ள நடிகர்கள், நடிகைகள், குணச்சித்திர நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எனத் திரையுலகின் பல தரப்பினரும் தமிழக அரசுக்கு நன்றி செலுத்தி வருகிறார்கள்.
அதேசமயம் விருது கிடைக்காதவர்கள் உள்ளுக்குள் மட்டும் குமுறிக்கொண்டிருக்கவில்லை. வெளிப்படையாக தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
இயக்குநர் சுசீந்திரன் தமிழக அரசின் விருதுகள் அறிவிப்பு குறித்து தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.
இதே போல் அங்காடி தெரு படத்தில் நடித்த இயக்குநர் ஏ.எல். வெங்கடேஷ், தனக்கு விருது அளிக்காமல் எந்தத் தகுதியின் அடிப்படையில் பிரகாஷ் ராஜூக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாடலாசிரியர் விருதுகளில் மட்டும் பெரிய இருட்டடிப்பு நிகழ்ந்துள்ளதாக உணர்கிறேன். இந்த ஆறு வருட விருது அறிவிப்புகளில் எனக்கும் வைரமுத்துவுக்கும் ஒரு விருது கூட அறிவிக்கவில்லை.
நானும் அவரும் இந்த ஆறு வருடங்களில் ஒரு விருதுக்குரிய பாடலைக்கூடவா எழுதவில்லை? விருதுக்குழுவினருக்கு மனசாட்சி என ஒன்று இருக்கிறதா என்பது என்னுடைய கேள்வி எனத் தனது அதிருப்தியை வலுவாகவே பதிவு செய்துள்ளார் கவிஞர் பா. விஜய்.
இதில் இன்னொரு ஆச்சர்யமும் உள்ளது. தேசிய அளவில் அங்கீகாரம் பெற்ற கலைஞர்கள் மற்றும் படங்களுக்கு மாநில அரசு விருதுகள் மறுக்கப்பட்டுள்ளன.
எனில் அந்த மாநில விருது அதைவிடவும் மிகச்சிறந்த படம், மிகச்சிறந்த கலைஞர்களுக்குத்தானே வழங்கப்பட்டிருக்கவேண்டும்! அப்படித்தான் நிகழ்ந்துள்ளதா?
2009
தேசிய விருது
சிறந்த குழந்தை நட்சத்திரம்: ஜீவா, இன்பா, அரசு (பசங்க படத்தின் கதாபாத்திரங்கள்)
சிறந்த வசனம்: பாண்டிராஜ் (பசங்க)
சிறந்த தமிழ்ப் படம்: பசங்க
மாநில விருது
சிறந்த படம் (முதல் பரிசு): பசங்க
சிறந்த உரையாடல் ஆசிரியர்: பாண்டிராஜ் (பசங்க)
சிறந்த குழந்தை நட்சத்திரம்: கிஷோர், ஸ்ரீராம் (பசங்க)
இந்த வருடம் எந்தவொரு சர்ச்சையும் இல்லை. மூன்று தேசிய விருதுகள் கிடைத்தன. மூன்றுக்கும் தமிழக அரசு விருதுகள் கிடைத்துள்ளன. ஆனால் ஆட்டமே இனிமேல்தான் உள்ளது.
2010
தேசிய விருது
சிறந்த தமிழ்ப் படம்: தென்மேற்குப் பருவக்காற்று
சிறந்த இயக்கம்: வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த நடிகர்: தனுஷ் (ஆடுகளம்)
சிறந்த நடிகை: சரண்யா (தென்மேற்குப் பருவக்காற்று)
சிறந்த துணை நடிகர்: தம்பி ராமையா (மைனா)
சிறந்த துணை நடிகை: சுகுமாரி (நம்ம கிராமம்)
சிறந்த திரைக்கதை: வெற்றிமாறன் (ஆடுகளம்)
சிறந்த படத்தொகுப்பு: கிஷோர் (ஆடுகளம்)
சிறந்த கலை இயக்கம்: சாபு சிரில் (எந்திரன்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: ஜெயன் (நம்ம கிராமம்)
சிறந்த பாடலாசிரியர்: வைரமுத்து (தென்மேற்குப் பருவக்காற்று)
சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ்: ஸ்ரீனிவாஸ் எம். மோகன் (எந்திரன்)
சிறந்த நடனம்: தினேஷ் குமார் (ஆடுகளம்)
சிறப்பு விருது: ஜெயபாலன் (ஆடுகளம்)
மாநில விருது
சிறந்த தமிழ்ப் படம்: மைனா
சிறந்த இயக்கம்: பிரபு சாலமன் (மைனா)
சிறந்த நடிகர்: விக்ரம் (ராவணன்)
சிறந்த நடிகை: அமலா பால் (மைனா)
சிறந்த துணை நடிகர்: சமுத்திரக் கனி (ஈசன்) ( சிறந்த குணச்சித்திர நடிகர் என்கிற விருதைத் தமிழக அரசு தருகிறது.)
சிறந்த துணை நடிகை: சரண்யா பொன்வண்ணன் (களவாணி)
சிறந்த திரைக்கதை: ஆற். சற்குணம் (களவாணி) *
சிறந்த படத்தொகுப்பு: பி. லெனின் (நம்ம கிராமம்)
சிறந்த கலை இயக்கம்: சி. சந்தானம் (ஆயிரத்தில் ஒருவன்)
சிறந்த ஆடை வடிவமைப்பு: நட்ராஜ் (களவாணி)**
சிறந்த பாடலாசிரியர்: பிறைசூடன் (நீயும் நானும்)
சிறந்த நடனம்: ராஜூ சுந்தரம் (பையா)
* – சிறந்த கதாசிரியர் என்கிற விருதைத் தமிழக அரசு தருகிறது.
** – (சிறந்த தையற்கலைஞர் என்கிற விருதைத் தமிழக அரசு தருகிறது.)
அடேங்கப்பா 2010-ல் தமிழ் சினிமா தேசிய விருதுகளை அள்ளிக் குவித்துவிட்டது.
ஆடுகளம், தென்மேற்குப் பருவக்காற்று, எந்திரன், நம்ம கிராமம் ஆகிய படங்கள் விருதுகளை அள்ளிவிட்டன. மொத்தம் 13 விருதுகள். கடைசியாக இத்தனை விருதுகளை எப்போது அள்ளியது?
ஆனால் இந்தப் படங்களுக்குத் தமிழக அரசின் திரைப்படத் தேர்வுக்குழுவிடம் எந்தவித மரியாதையும் கிடைக்கவில்லை.
தேசிய விருதுகளை அள்ளிய ஆடுகளம், தென்மேற்குப் பருவக்காற்று, எந்திரன் ஆகிய படங்களுக்குத் தமிழக அரசின் விருது எதுவும் கிடைக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
விதிவிலக்காக சிறந்தப் பின்னணிப் பாடகிக்கான விருது (சின்மயி) எந்திரனுக்குக் கிடைத்தது. தேசிய விருது பெற்ற இப்படங்கள் எதன் அடிப்படையில் மாநில விருதுக்குத் தகுதி பெறவில்லை?
தேசிய அளவில் துணை நடிகர் என்கிற பெயரில் வழங்கப்படும் விருது தமிழ்நாட்டில் குணச்சித்திர நடிகர் என்கிற பெயரில் விருது வழங்கப்படுகிறது.
தேசிய அளவில் சிறந்த துணை நடிகராக விருது வாங்கிய தம்பி ராமையா, மாநில அளவில் அதே மைனா படத்துக்குச் சிறந்த நகைச்சுவை நடிகராகத் தேர்ந்தெடுக்கப்படுள்ளார்.
என்னே ஒரு நகைமுரண்! அதேபோல சரண்யா பொன்வண்ணனுக்கும் விருது கிடைத்துள்ளது.
ஆனால் தேசிய அளவில் தென்மேற்குப் பருவக்காற்று படத்துக்காக விருது வாங்கிய அவர், மாநில அளவில் களவாணி படத்துக்காக வாங்கியுள்ளார். ஏதோ ஒன்று என இருவரும் திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.
நம்ம கிராமம் படத்துக்காக சிறந்த ஆடை வடிவமைப்பாளர் தேசிய விருதை ஜெயன் பெற்றார்.
தமிழக அரசு விருது எந்தப் படத்துக்குத் தெரியுமா? களவாணி படத்துக்கு! அந்தப் படத்தில் சிறந்த ஆடை வடிவமைப்புக்கு எப்படி என்ன தேவை இருந்தது எனத் தெரியவில்லை.