சிறு வயதிலேயே தாய், தந்தையை இழந்த கிருஷ்ணாவை, அவரது உறவினர் காப்பகத்தில் சேர்த்து விடுகிறார். தொடக்கத்தில் அங்கு அடிதடியில் ஈடுபடும் கிருஷ்ணா, பெரியவனாக ஆன பின்னர் அடிதடிகளை விட்டுவிட்டு பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கிருஷ்ணாவின் நண்பரான பிளாக் பாண்டியும் அதே ஹோட்டலில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கயல் ஆனந்தியை பார்க்கும் கிருஷ்ணாவுக்கு அவள் மீது காதல் வருகிறது. அவளை மீண்டும் பார்க்க வேண்டும் என்று கிருஷ்ணா ஏங்கிக் கொண்டிருக்கிறார்.
இதுஒருபுறம் இருக்க வீடியோ கேம்ஸ் கடை வைத்திருக்கும் சரவணன் சூதாட்டத்தில் அதீத ஈடுபாடுடன் இருக்கிறார். அந்த ஈடுபாட்டின் காரணமாக மதுசூதனன் நடத்தும் கிரிக்கெட் சூதாட்ட குழுவில் இணைந்து சூதாடி வருகிறார். மேலும் சூதாட்டத்தின் மூலம் தனது வீடு மற்றும் சொத்து அனைத்தையும் இழந்து விடுகிறார். இதனால் அவரது மனைவியும், அவரை விட்டுச் செல்கிறார். இதையடுத்து விட்டதை பிடிக்க சரவணன் தொடர்ந்து முயற்சி செய்து வரும் வேளையில், கிருஷ்ணாவை சந்திக்கிறார். அதுவும் கிருஷ்ணா ஒருவரை சரமாரியாக அடித்து துவம்சம் செய்யும் போது அவரை சந்திக்கிறார்.
இதையடுத்து கிருஷ்ணாவிடம் இங்கு செய்யும் சண்டையை தன்னுடன் வந்து ஒரு இடத்தில் சண்டை செய்தால் இருவருக்கும் பணம் கிடைக்கும் என்று கூறுகிறார். முதலில் சரவணனின் அழைப்பை ஏற்காத கிருஷ்ணா, தனது தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பணம் தேவைப்படுவதால், அந்த சண்டையில் பங்கேற்க ஒத்துக் கொள்கிறார்.
சூதாட்டத்தில் ஈடுபடுவோர், அதில் இருந்து வெளியேறி விடக்கூடாது என்பதற்காக மதுசூதனன் தெரு சண்டை (STREET FIGHT) ஒன்றை நடத்தி வருகிறார். இதில் சண்டை போடுபவர்களை வைத்து சூதாட்டம் நடத்தப்படுகிறது. ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் இந்த சண்டை நடத்தப்படுகிறது.
முதலில் பங்கேற்ற சிறிய சிறிய சண்டைகளில் கிருஷ்ணா வெற்றி பெற்றதை அடுத்து, பெரிய போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பும் கிடைக்கிறது. இதில் கிருஷ்ணா தோல்வியடைவார் என்று பெட் கட்டுகின்றனர். ஆனால் அந்த போட்டியிலும் கிருஷ்ணா வெற்றி பெற்றதால், அருள்தாஸிடம் கடன் வாங்கும், சரவணன் தான் கட்டிய பணத்தை இழந்து விட, தனக்கு தரவேண்டிய பணம் வரவில்லையென்றால் சரவணணை கொன்றுவிடுவதாக அருள்தாஸ் மிரட்டுகிறார்.
இந்நிலையில், மதுசூதனனிடம் வேலை பார்க்கும் நிதின் சத்யா, சூதாட்டம் என்ற பெயரில், மதுசூதனன் அனைவரையும் ஏமாற்றி வருவதாகக் கூறுகிறார். சரவணனன் சூதாட்டத்தின் மூலம் பணத்தை இழக்கவில்லை என்றும், ஏமாற்றப்பட்டார் என்பதையும் சொன்னவுடன், சரவணன் தான் இழந்த பணத்தை அவரிடம் இருந்து பெற வேண்டும் என்று நினைக்கிறார். இதையடுத்து நிதின் சத்யா பணம் இருக்கும் இடம் தனக்கு தெரியும் என்று கூற, அந்த பணத்தை எடுப்பதற்கு தான் திட்டம் வைத்திருப்பதாகவும் சொல்கிறார்.
முதலில் இந்த திட்டத்திற்கு சரவணன் ஒப்புதல் தெரிவித்தாலும், கிருஷ்ணா மறுப்பு தெரிவிக்கிறார். இதையடுத்து அவர்களது நிலைமையை உணர்ந்து அவர்களுக்கு துணைபோகிறார். பின்பு திட்டமிட்டபடி மதுசூதனனிடம் இருந்து பணத்தை திருடினார்களா? மதுசூதனன் இவர்களை என்ன செய்தார்? மதுசூதனனடம் இருந்து இவர்கள் தப்பித்தார்களா? கிருஷ்ணா, ஆனந்தியின் காதல் வெற்றி பெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.
வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் கிருஷ்ணா, இப்படத்தின் மூலமும் அதனை நிரூபித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் இதுவரை வராத தெரு சண்டையை மையமாக வைத்து இப்படத்தில் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக கிருஷ்ணா அவதாரம் எடுத்திருக்கிறார். ஒரு இளைஞனாக சண்டையில் தனது கோபத்தை காட்டுவதிலும், கயல் ஆனந்தியிடம் தனது காதலை வெளிப்படுத்துவதிலும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
கயல் ஆனந்தி மற்ற படங்களைப் போல இந்த படத்திலும் தனது நடிப்பின் மூலம் வரவேற்பை பெற்றிருக்கிறார். திரையில் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. சரவணன் படம் முழுக்க வந்து செல்கிறார். அவரது கதாபாத்திரம் படத்திற்கே அச்சாணியாக விளங்குகிறது. சூதாட்டத்தில் ஆர்வத்துடன் ஈடுபடும் போதும், அதில் தனது சொத்துக்களை இழந்து பின்னர், அதனை மீட்கும் முயற்சியில் ஈடுபடும் சரவணின் நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறார். ஒரு சூதாட்டக்காரராகவே வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லும் அளவுக்கு அவரது கதாபாத்திரம் சிறப்பாக இருக்கிறது.
வஞ்சகம், வேஷம் என சூதாட்டத் தளபதியாக மதுசூதனின் அட்டகாசப்படுத்தி இருக்கிறார். தான் நடிக்கும் ஒவ்வொரு படங்களிலும் தனது கதாபாத்திரம் குறித்து பேசவைக்கும் அருள்தாஸ், இந்த படத்திலும் அனைவரையும் கவரும்படி நடித்திருக்கிறார். காமெடியில் பிளாக் பாண்டி படம் முழுக்க வந்தாலும், அவரது காமெடி அவ்வளவாக எடுபடவில்லை. குறைவான காட்சியில் வந்தாலும், கருணாஸ் அனைவரையும் எதிர்பாராத சிரிப்புக்கு ஆளாக்குகிறார். நிதின் சத்யா, அர்ஜய், சண்முகராஜன் என அனைவரும் கதாபாத்திரத்திற்கு தேவையானதை சிறப்பாக கொடுத்திருக்கின்றனர்.
தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவராத ஸ்ட்ரீட் சண்டையை அறிமுகப்படுத்தி, அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் ஃபெரோஸ். குறிப்பாக இளைஞர்கள் விரும்பிப் பார்க்கும்படியாக படத்தை இயக்கி இருப்பது படத்திற்கு பலம். சூதாட்டம், சண்டை, காதல் என அனைத்தையும் ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார். அதற்கேற்றாற் போல், திரைக்கதையை அமைத்திருப்பது படத்தை ரசித்து பார்க்கும் படி இருக்கிறது.
ஆர்.எச்.விக்ரமின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்களும் ரசிக்கும்படி இருக்கிறது. அர்வியின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. குறிப்பாக சண்டைக் காட்சியில் விளையாடியிருக்கிறார்.
மொத்தத்தில் `பண்டிகை’ கொண்டாட்டம்.