தாய், தந்தையை இழந்த பிரஜின் மற்றும் அவரது நண்பர் இருவரும் சிறுவயதிலிருந்தே ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள். பிரஜின் வளையல் உள்ளிட்ட பெண்கள் விரும்பும் அழகு சாதனப் பொருட்களை விற்று வருகிறார். அவரது நண்பர் பன்றி பண்ணை ஒன்றில் வேலை செய்து வருகிறார். தாய் மீது அதீத அன்பு வைத்திருந்த பிரஜினின் நண்பனுக்கு, தனது தாய் தன்னுடன் வந்து பேசுவது போன்ற ஒரு மாயை தோன்றும்.
பிரஜினின் அன்பால் பின்னாளில் தனது தாயின் நினைவின்றி, மாயையை மறந்து வாழ்ந்து வருகிறான். இதில் பிரஜின், நாயகியான கலா கல்யாணியை காதலித்து வருகிறார். கல்யாணியும், பிரஜினை காதலிக்கிறாள். கல்யாணிக்கு நான்கு அண்ணன்கள் உள்ளனர். கல்யாணியின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பிரஜினை தொடர்ந்து மிரட்டி வருகின்றனர்.
இதனிடையே, பிரஜின் – கல்யாணி இருவரும் ஊர் சுற்றிவருவதை பார்த்த, கல்யாணியின் அண்ணன்களுக்கு கோபம் வர, கல்யாணி முன்பாகவே பிரஜினை அடித்து தூக்கில் தொங்க விட்டுவிடுகின்றனர். மேலும் கொலை பழியை பிரஜினின் நண்பன் மீது சுமத்திவிடுகின்றனர். உண்மையை கல்யாணி வெளியே சொல்லிவிடக் கூடாது என்பதற்காக அவளுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதாகக் கூறிவிடுகின்றனர்.
இவ்வாறாக பிரஜினை இழந்த அவரது நண்பன், தினசரி வாழ்க்கையை கஷ்டத்துடன் வாழ்ந்து வருகிறான். இந்நிலையில், அவனது அம்மா பேசியது போல, பிரஜினும் மாயை தோற்றத்தில் அவனிடம் பேசுவது போல அவனுக்கு தோன்றுகிறது. அவனும் பிரஜினுடன் பேச, கல்யாணி தன்னிடம் பேசாமல் இருப்பதாக பிரஜின் கூறுகிறார்.
இதையடுத்து, பிரஜின், கல்யாணியை அழைப்பதாக பிரஜினின் நண்பன் கல்யாணியிடம் வந்து கூற, செய்வதறியாது விழிக்கும் கல்யாணி என்ன செய்தாள்? பிரஜினை கொன்றது அவளது அண்ணன் தான் என்ற உண்மையை ஊர் மக்களுக்கு தெரியப்படுத்தினாளா? பிரஜினின் நண்பன் மீதான பழிக்கு விடை கிடைத்ததா? கல்யாணியின் அண்ணன்கனை பிரஜினின் நண்பன் பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
காதல் செய்யும் கிராமத்து இளைஞனாக பிரஜின் சிறப்பாக நடித்திருக்கிறார். இதற்கு முந்தைய படங்களை போல இப்படத்திலும் அவரது நடிப்பு ரசிக்கும்படி இருக்கிறது. கலா கல்யாணி கதைக்கு தேவையான நடிப்பை சிறப்பாக கொடுத்திருக்கிறார். பிரஜினின் நண்பன், கல்யாணியின் அண்ணன்கள் என அனைவரும் கதைக்கு ஏற்ப நடித்திருப்பது சிறப்பு.
புதுமையான கதையை தேர்ந்தெடுத்து இயக்கியிருக்கும் பென்னி தாமஸின் முயற்சிக்கு பாராட்டுக்கள். ஒரு வித்தியாசமான கதையை, கிராமத்து கதைக்களத்தில் சிறப்பாக இயக்கியிருக்கிறார். திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம். குறிப்பாக கல்யாணியின் அண்ணன்களின் கதாபாத்திரங்கள், திடீர் திடீரென மாறுவது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை.
அப்சல் யூசுப், இ.எஸ்.ராமின் இசையில் பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை ரசிக்கும்படி இருக்கிறது. சாலியின் ஒளிப்பதிவில் கிராமத்தின் பின்னணி காட்சிகள் ரசிக்கும்படி இருக்கிறது.
மொத்தத்தில் `எங்கேயும் நான் இருப்பேன்’ வேகம் குறைவுதான்.