உலகம் முழுவதும் ஆபாசப் படங்களை பதிவேற்றம் செய்யும் இணையதளங்கள் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகின்றன. இந்தியாவை பொருத்தவரை சிறார்-சிறுமியர்களின் ஆபாசப் படங்களை வெளியிடும் இணையதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும், பெரும்பாலான இதர ஆபாச இணையத்தளங்கள் இங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், மத்திய-மாநில அரசுகளுக்கு சொந்தமான சில அலுவலகங்கள், வங்கிகள், ரெயில் நிலையங்களில் பொதுமக்களின் வசதிக்காக இலவச இணையதள சேவை (வைஃபை) வழங்கப்படுகிறது. குறிப்பாக, சமீபத்தில் நடந்து முடிந்த மும்பை மாநாகராட்சிக்கான தேர்தலுக்கு பின்னர் மும்பை நகருக்குட்பட்ட 585 பகுதிகளில் இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வசதியின் மூலம் தினந்தோறும் சராசரியாக 3 லட்சம் மக்கள் பயன் அடைந்து வருகின்றனர், இலவச வைஃபை வசதி செய்யப்பட்டுள்ள இடங்களில் இருந்து எந்தெந்த இணையதளங்களுக்கு பயனாளிகள் செல்கின்றனர் என்பதை ஆய்வு செய்தபோது, மும்பைவாசிகளில் சுமார் 30 ஆயிரம் பேர்வரை தினந்தோறும் ஓசி இண்டர்நெட் மூலம் ஆபாசப் படங்களை பார்த்து ரசிப்பதாக தெரியவந்துள்ளது.
இப்படிப்பட்ட ஆபாச இணையதளங்களை தகவல் தொழில்நுட்பத்துறை வல்லுனர்கள் முடக்கினாலும், வேறொரு வகையில் புத்தம்புதிய பதிவுப் பெயருடன் இந்த ஆபாச இணையத்தளங்கள் மீண்டும் தலையை நுழைப்பதால் இவற்றை பரிபூரணமாக தடை செய்ய இயலவில்லை என கூறப்படுகிறது.
இதேபோல் நாடு முழுவதும் 33 சதவீதம் பேர் இலவச வைஃபை சேவையை பயன்படுத்தி ஆபாசப் படங்களை பார்த்து ரசிப்பதாகவும் மற்றொரு ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.