கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல பாப் பாடகரான ஜஸ்டின் பீபர், சீனாவில் நிகழ்ச்சிகள் நடத்த தடை விதித்து பீஜிங் கலாச்சார அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அந்த அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், `’மோசமான நடத்தை` உள்ள பொழுதுபோக்கு கலைஞர்களை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிப்பது பொருத்தமாக இருக்காது’ என சீனா தெரிவித்துள்ளது.
`ஜஸ்டின் பீபர் அற்புதமான ஒரு பாடகர். ஆனால் அவர் சர்ச்சைக்குரிய இளம் வெளிநாட்டு பாடகர்.` என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கலாச்சார அமைச்சகத்தின் இணையதளத்தில் பயனாளர் ஒருவர் சமீபத்தில் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் விதத்தில் இந்த அறிக்கையானது வெளியிடப்பட்டுள்ளது.
`ஜஸ்டின் பீபர் முதிர்ச்சி அடைந்திருப்பார் என நாங்கள் நம்புகிறோம். தன்னுடைய வார்த்தைகளையும், செய்கைகளையும் அவர் தொடர்ந்து முன்னேற்ற முடியும்.
மேலும் மக்களால் அன்பு செய்யப்படும் உண்மையான ஒரு பாடகராக அவரால் உருவாக முடியும்.` என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆசியாவில் ஜஸ்டின் பீபர் சர்ச்சைக்கு காரணமாவது இது முதல்முறை அல்ல.
கடந்த 2014-ஆம் ஆண்டு, டோக்கியோவில் உள்ள சர்ச்சைக்குரிய யாசுகுனி கோயிலுக்கு சென்று, அதனை புகைப்படம் எடுத்து பதிவிட்டது, சமூக வலைத்தளங்களில் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இந்த கோயில் போரில் மரணமடைந்த வீரர்களை பெருமைப்படுத்துகிறது மற்றும் போர்க் குற்றவாளிகளுக்கு மரியாதை செய்கிறது என சீனாவிலும், தென் கொரியாவிலும் நம்பப்படுகிறது. மேலும் தனது பேரரசின் பழைய கால தவறுகளுக்கு ஜப்பான் மன்னிப்பு கேட்காததன் ஒரு அடையாளமாகவே, அந்த கோயில் பார்க்கப்படுகிறது.
ஜஸ்டின் பீபரின் இந்த செயலுக்கு சீனர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த சர்ச்சைக்குரிய புகைப்படத்தை நீக்கிய அவர் அதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.
செப்டம்பர் மாதம் துவங்கும் தனது உலக சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக ஆசியாவுக்கு வரும் ஜஸ்டின் பீபர், ஜப்பான், ஹாங்காங், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர் மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்த இருக்கிறார்.