நடிகர் கிஷோர் தேவ்
நடிகை பரதா நாயுடு
இயக்குனர் பாண்டி அருணாச்சலம்
இசை சதிஷ்
ஓளிப்பதிவு செல்வகுமார் சுப்பையா
நாயகன் கிஷோர் தேவ், மாவு கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார்.
அதே நேரத்தில் தண்ணீர் கேன் போடுதல் உள்ளிட்ட பல வேலைகளையும் செய்து வருகிறார்.
நாயகி பாரத நாயுடு, அவளது பாட்டியின் கட்டுப்பாட்டில் வாழ்ந்து வருகிறாள். பாரத நாயுடுவின் பாட்டி மளிகை கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார்.
அவர்களது கடைக்கு தண்ணீர் போட வருகிறார் கிஷோர். அதே நேரத்தில் கிஷோர் வேலை பார்க்கும் மாவு கடைக்கு நாயகி அடிக்கடி வருகிறாள்.
இவ்வாறாக இருவரது சந்திப்பும் நாளடைவில் காதலாக மாறுகிறது. இதையடுத்து கிஷோர் தேவ் – பாரத நாயுடு இடையேயான நெருக்கம் மேலும் அதிகமாக, இருவரும் முதல் முத்தம் ஒன்று கொடுக்க முடிவு செய்கின்றனர்.
அதனை ஒரு செல்பியாக பதிவு செய்ய வேண்டும் என்று நாயகி விரும்புகிறாள்.
பாரத நாயடுவின் விருப்பத்தை நிறைவேற்ற, கிஷோர் தனது சக்திக்கு ஏற்ற மொபைல் ஒன்றை வாங்குகிறார். இதனை தனது பாரத நாயுடுவிடம் தெரிவித்து தயாராக இருக்கும்படி கூறிவிட்டு, அந்த மொபைலை எடுத்துக் கொண்டு அவரது வீட்டுக்கும் வருகிறார்.
பின்னர் தன்னைத் தானே செல்பியும் எடுத்துக் கொள்கிறார் கிஷோர்.
பின்னர் தனது செல்பிகளை பார்க்கும் கிஷோருக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. அவரது செல்பி போட்டோக்கள் அனைத்தும் தெளிவின்றி மங்கலாக இருக்கிறது.
இதையடுத்து தமிழ் சினிமாவுக்கே உரித்தான ஸ்டைலில் மின்சாரம் விட்டு விட்டு எரிய, பேய் ஒன்று வருகிறது.
அந்த பேய் தன்னை நிரஞ்சனா என்று அறிமுகப்படுத்திக் கொண்டு, கிஷோர் தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகக் கூறுகிறது.
இதனால் அதிர்ச்சியடையும், கிஷோர், அடுத்ததாக என்ன செய்தார்? அந்த நிரஞ்சனா யார்? நிரஞ்சனாவுக்கும் – கிஷோருக்கும் என்ன சம்பந்தம்? நிரஞ்சனாவை கிஷோர் உண்மையாகவே காதலித்தாரா? உண்மை என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
நடிகர் கிஷோர் ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞனாக சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகி பாரத நாயுடுவின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது.
இருவருக்கும் இடையே ஒரு பட்டும் படாத காதல் இருப்பது ரசிக்கும்படி இருக்கிறது. மற்ற துணை கதாபாத்திரங்களும் கதைக்கு ஏற்ப வந்து செல்கின்றனர்.
கிஷோர் தேவ் – பாரத நாயுடு இடையேயான காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கும் பாண்டி அருணாச்சலம் பேயை காட்டுவதில் சொதப்பி இருக்கிறார். பேயை பார்த்தால் ஒருவித பயம் வர வேண்டும்.
நிரஞ்சனா பேயை பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. திரைக்கதையிலும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
சதீஷின் பின்னணி இசைக்கு பேய் வரும் காட்சிகள் ஈடுகொடுக்கும்படியாக இல்லை. பாடல்கள் கேட்கும்படி இருக்கிறது. செல்வகுமார் சுப்பைய்யாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் சுமார் ரகம் தான்.
மொத்தத்தில் `நிரஞ்சனா’ சிரிப்பு பேய்.