தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு வரும் 30ம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது.
தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
இயக்குநர் விக்ரமன் தலைமையிலான நிர்வாகத்தின் பதவிக் காலம் முடிவுக்கு வந்ததையடுத்து, சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஜூலை 30ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) தேர்தல் நடைபெறவுள்ளது. சுமார் 2,300 உறுப்பினர்கள் இத்தேர்தலில் வாக்களித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்யவுள்ளனர்.
சென்னை வடபழனியில் உள்ள மியூசிக் யூனியன் அலுவலகத்தில் நடைபெறவுள்ள இத் தேர்தலுக்கு, முன்னாள் மாவட்ட நீதிபதி பாலசுப்ரமணியம் தேர்தல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருமுனை போட்டி: கடந்த முறை நிர்வாக பதவியை வகித்த இயக்குநர் விக்ரமன் தலைமையிலான அணி சிறு சிறு மாற்றங்களுடன் இந்த தேர்தலையும் சந்திக்கிறது.
” புது வசந்தம்’ என்ற பெயரில் இத்தேர்தலை சந்திக்கவுள்ள அந்த அணியில் விக்ரமன் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். செயலாளர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு பேரரசு களம் காண்கிறார்.
துணைத் தலைவர்கள் பதவிக்கு கே.எஸ்.ரவிக்குமார், ஆர்.வி.உதயகுமார் இருவரும் போட்டியிடுகின்றனர். இதைத் தவிர இணைச் செயலாளர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இந்த அணியின் சார்பில் வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
ஜெகதீஷ் தலைமையில் “புதிய அலைகள்’ என்ற பெயரில் மற்றொரு அணி களம் காண்கிறது. இந்த இரு அணிகளுக்கும் இடையே தற்போது போட்டி நிலவி வருகிறது.