கொலம்பியாவில் மூன்று ஆண்கள் ஒன்றாக இணைந்து வாழ்வதை சட்டப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளதால் வெகுவாக பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இதனால் எதிர்காலத்தில் மூன்று பேர் திருமணம் செய்து கொள்ளும் “முக்கோணத் திருமணங்களை” நம்மால் காண முடியுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
” விக்டர் மோசமான நகைச்சுவைகளைக் கூறுவார்” என்று மானுவேல் தெரிவிக்கிறார்.
“இதை நானும் ஆமோதிக்கிறேன்” என்கிறார் அவரது இணை அலெஜேண்ட்ரோ.
“அப்படி எல்லாம் இல்லை, நான் நல்ல நகைச்சுவைகளையே கூறுவேன்” என்கிறார் மானுவேல்.
மானுவேல், விக்டர் ஹகோ ப்ராடா, அலெஜாண்ட்ரோ இவர்கள் மூன்று பேரும் இணைந்து ஒன்றாக உறவில் இருக்கின்றனர். இவர்களின் மற்றொரு ஆண் இணையர் அலெக்ஸ் கடந்த 2014-ம் ஆண்டு இறக்கும் முன்பு வரை இவர்கள் நான்கு பேரும் இணைந்து வாழ்ந்து வந்தனர்.
“அலெக்ஸ் இறப்பதற்கு முன்பே திருமணம் செய்வதற்கான முடிவு எடுக்கப்பட்டது. நாங்கள் நான்கு பேரும் திருமணம் செய்துகொள்ள விரும்பினோம்” என்கிறார் விக்டர்.
“அலெக்ஸை தாக்கிய கேன்சர் எங்களது திருமணத்திற்கான திட்டத்தையும் தாக்கியது. ஆனால் நான் ஒருபோதும் மனம் தளரவில்லை ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கொலம்பியாவில் உள்ள மெடலின் நகரத்தில் வாழ்ந்து வரும் இவர்கள், அலெக்ஸ் இறந்த போது, அவரது இணையர்களாக கண்டறியப்படவும், அவரது ஓய்வூதியத்தை பெறுவதற்கும் போராட வேண்டியிருந்ததாக தெரிவிக்கின்றனர்.
நான்கு பேரும் ஒன்றாக இணைந்து வாழ்வதற்கான சட்டப்பூர்வமான அங்கீகாரத்தைப் பெற இதுவே இவர்களுக்கு மேலும் உறுதியினை தந்துள்ளது.
கடந்த மாதம் இவர்கள் திருமணம் செய்வதை அங்கீகரிக்கும் வகையில் ஒரு சிறப்பு சட்ட ஆவணத்தில் வழக்கறிஞர் கையெழுத்திட்டுள்ளதை அடுத்து, நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த திருமண விழாவிற்கான திட்டமிடுதலில் இறங்கியுள்ளனர்.
” ஒரே வீட்டில், ஒரே படுக்கையை பகிர்ந்து கொண்டு நாங்கள் மூன்று பேரும் இணைந்து ஒரு குடும்பமாக வாழ முடியும் என்று அந்த ஆவணம் கூறுகிறது ” என விக்டர் விளக்குகிறார்.
அவர்கள் இணைந்து வாழ்வது முறையானது என்று ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அது முழுமையான திருமண சான்றிதழ் அல்ல. மூன்று பேர் ஒன்றாக இணைந்து திருமணம் செய்து கொள்வதை ஏற்றுக் கொள்ளும் நாடுகளைத் தவிர, கொலம்பியா போன்ற மற்ற நாடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து கொள்வது சட்டவிரோதமானது.
ஆனால், பலதாரமணம் அல்லது கூட்டுத் திருமணம் மறைமுகமாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், அலெஜேண்ட்ரோ, மானுவேல் மற்றும் விக்டர் ஆகியோரின் சட்டப்பூர்வ வெற்றி என்பது ஒரு பெரிய முன்னேற்றம் என்றே கூறலாம்.
கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹாடர் அவிரம் கூறுகையில், 2004-ம் ஆண்டு கூட்டுத் திருமணம் குறித்த ஆராய்ச்சியை தொடங்கிய போது மிகவும் குறைவான எண்ணிக்கையே தென்பட்டதாகவும், ஆனால் 2012-ம் ஆண்டிலிருந்து மாற்றங்கள் நடைபெறுவதை காண முடிகிறது என்றும் தெரிவித்தார்.
அமெரிக்காவின் லவ்விங் மோர் என்ற அமைப்பு நடத்திய ஒரு ஆய்வில், கூட்டுத் திருமணத்தில் ஆர்வமுள்ள 4000-க்கும் அதிகமானோர் ஒன்றுக்கும் மேற்பட்டோரை திருமணம் செய்து கொள்வது சட்டப்பூர்வமாக ஒப்புக்கொள்ளப்பட்டால், திருமணம் செய்துகொள்ள விருப்பமிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
உலகெங்கிலும் ஒரு பாலின திருமணத்தை பரவலாக ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் வந்துள்ளதே மாற்றங்கள் ஏற்படுவதற்கான காரணமாக இருக்கலாம் என்றும் புதிய தடைகளை உடைப்பதற்கான வழி இதுதான் என்றும் பேராசிரியர் அவிரம் நம்புகிறார்.
கூட்டுத் திருமணத்திற்கான சட்டப்பூர்வ அங்கீகாரம் அபூர்வமான ஒன்றாக இருந்தாலும், கொலாம்பியாவில் நடைபெற்றுள்ள இதுபோன்ற நிகழ்வுகள் முக்கோண உறவுகளில் இருப்பவர்களுக்கு நம்பிக்கையளித்துள்ளது.
ஃப்ளோரிடாவை சேர்ந்த இரண்டு குழந்தைகளுக்கு தாயான டெயானா ரிவாஸ், “இது மிகவும் ஊக்கமளிக்கும் ஒன்றாக இருக்கிறது ” என்று கூறுகிறார்.
“எனக்கு ஆண் மற்றும் பெண் என இரு பாலினரிடமும் விருப்பம் இருந்தது” என்று தெரிவித்த அவர், ” ஆனால், நான் மேனியை திருமணம் செய்து கொண்டு கடந்த 5 ஆண்டுகளாக உறவில் இருக்கிறேன்” என்றும் கூறினார்.
ஆனால், அவர்களுக்கு இரண்டாவது குழந்தை பிறந்த பின்பு, உணர்வு ரீதியிலான ஒரு ஆதரவினை தனது கணவரால் மட்டும் தந்துவிட முடியாது என நினைத்த டெயானா மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.
“நான் மகிழ்ச்சியாக இல்லை. என்னுடைய உணர்வுகளை அவரிடம் வெளிப்படுத்த முடியவில்லை. என்னுடைய மற்றொரு பாகத்தை நான் இழந்தேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் மெலிசாவை சந்தித்த போது இது சரியென்று தோன்றியது”
கலை ஆசிரியையான டெயானா தற்போது தனது கணவர் மேனி மற்றும் 20 வயதான மெலிசாவுடன் சேர்ந்து வருவாய், குழந்தை வளர்ப்பு, வீட்டு வெலைகள் மற்றும் படுக்கையையும் பகிர்ந்து வாழ்ந்து வருகிறார்.
டெயானாவின் கணவர் மேனி இதுகுறித்து தெரிவிக்கையில், “இது என்னுடைய விருப்பம் என்பதை விட இது மனைவியின் விருப்பம் என்று கூறும் போது தான் மக்கள் புரிந்து கொள்கின்றனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடக்கத்தில் மூன்று பேருக்கும் ஒருவர் மீது ஒருவர் பொறாமை இருந்ததை ஒத்துக்கொண்டாலும், மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக் கொண்டனர்.
2020-ஆம் ஆண்டு திருமண விழாவை நடத்தவும் அவர்கள் திட்டமிடுள்ளனர்.
இவர்களுடன் இணைந்து வாழ்ந்து வரும் மெலிசா இதுகுறித்து தெரிவிக்கையில் ” மிகவும் அழகாக மற்றும் இயல்பாக இருப்பவற்றை நான் விரும்புவேன். பூக்களால் சூழப்பட்ட அடுக்குகள் மற்றும் வானவில் வண்ணங்கள் போன்றவற்றை விரும்புவேன்” என்று கூறினார்.
ஆனால், இவர்களின் திருமணம் சட்டப்பூர்வமாக இருக்காது. அவர்கள் கண்டிப்பாக ஒரு மாற்று வழியை கண்டுபிடித்தாக வேண்டும்.
மேனி மற்றும் டெயானாவிற்கு பிறந்த இரண்டு குழந்தைகளுக்கும் பாதுகாவலராய் மெலிசாவை அவர்கள் அங்கீகரித்துள்ளனர். கூடிய விரைவில் மெலிசாவும் தனது பெயரை ரிவாஸ் என்று மாற்றவுள்ளார்.
கூட்டுத் திருமணத்திற்கு முறையான அனுமதி இல்லாததால், மற்ற தம்பதிகள் போன்று வரி சலுகைகள் உள்ளிட்டவற்றை இவர்களால் பெற இயலாது.
ஆனால், இதுபோன்ற முன்னெடுப்புகளுக்கு சில தடைகளும் உருவாகியுள்ளன. கத்தோலிக்கத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ள கொலம்பியாவில் கூட கூட்டுத் திருமணத்திற்கு அனுமதியளித்த வழக்கறிஞர் விசாரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
இது திருமணத்தின் புனிதத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் அல்லது குடும்பங்கள் பிரிவதை ஊக்குவிக்கும் என்ற அச்சமும் நிலவுகிறது.
சில ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமத்துவத்திற்கான தங்களது போராட்டம் மற்றும் முந்தைய உத்திரவாதங்களை கொச்சைப்படுத்தும் விதமாக இது அமைந்துள்ளது என்றும் விமர்சித்துள்ளனர்.
மேலும், கூட்டு உறவில் அல்லது முக்கோண உறவில் இருக்கும் பலர் நம்பிக்கையவற்றவர்களாக இருக்கிறார்கள் என்றும், பொது இடத்தில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவும், பாரம்பரியமான திருமண முறையை ஏற்றுக் கொள்வதில் தயக்கம் தெரிவிப்பதாகவும் பேராசிரியர் அவிரம் தெரிவித்துள்ளார்.
கூட்டுத் திருமணத்தில் ஈடுபடுவோர் நீடித்த உறவில் சிக்கல் இல்லாமல் வாழ்வது போன்ற பல முன்மாதிரிகள் மக்களுக்கு தேவைப்படுகின்றனர். அதன் மூலம் மட்டுமே மாற்றங்கள் உருவாகும்.