ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவருடைய மனைவி செல்வி, மகன் கார்த்திக் (வயது 25). டெல்லி மந்திர்மார் பகுதியில் உள்ள தமிழ் பள்ளியில் அலுவலக உதவியாளராக கார்த்திக் பணிபுரிந்துவந்தார். திருமணம் ஆகாத கார்த்திக், டெல்லி சக்கூர் பூரில் தனது பெற்றோருடன் வசித்துவந்தார்.
கார்த்திக் கடந்த 23-ந் தேதி இரவு டெல்லி வசந்த்குஞ்ச் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது சாலை தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் கார்த்திக் மூளைச்சாவு அடைந்தார். உடல் உறுப்புகள் தானம் பற்றி அறிந்திருந்த அவருடைய உறவினர்கள் அதுபற்றி கார்த்திக்கின் பெற்றோரிடம் கூறினார்கள். அந்த சோகத்திலும் கார்த்திக்கின் பெற்றோர் உடல் உறுப்புகள் தானத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து கார்த்திக்கின் 2 கண்கள் ஒரு நபருக்கும், 2 சிறுநீரகங்கள் தலா ஒருவருக்கும், இதயம் மற்றும் கல்லீரல் ஆகியவை வேறு இருவருக்குமாக மொத்தம் 5 பேருக்கு தானமாக வழங்கப்பட்டன. அந்த ஆஸ்பத்திரியிலேயே அதற்கான ஏற்பாடுகள் உடனடியாக நடந்தன.