தென்னாப்ரிக்காவின் நஸ்ரெக் பகுதியில் அமைந்துள்ளது எஃப்.என்.பி. மைதானம். கடந்த 2010ம் ஆண்டு நடைபெற்ற பிஃபா கால்பந்து உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி இந்த மைதானத்தில்தான் நடைபெற்றது.
இந்நிலையில், இந்த மைதானாத்தில் தென்னாப்ரிக்காவின் பிரபலமான இரு உள்ளுர் கால்பந்தாட்ட அணிகள் பங்குபெற்ற போட்டி நேற்று நடந்தது.
இப்போட்டிக்கான டிக்கெட்கள் இரண்டு வாரங்களுக்கு முன்னரே விற்று தீர்ந்துவிட்டன. இதனால், போட்டியைக் காணவும் ஏராளமான மக்கள் மைதானத்திற்கு வந்தனர்.
அதிகமான மக்கள் மைதானத்திற்கு வருகையின் காரணமாக ஏற்பட்ட கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
மேலும் பலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
கால்பந்து விளையாட்டை கண்டிகளிக்கவந்த இடத்தில் இருவர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒவ்வொரு முறையும் இந்த இரு அணிகள் மோதும் போதும் மைதானத்தில் கூட்டம் அலைமோதுவதும், அதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டு விபத்து ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
இதற்கு முன்னதாக கடந்த 2001ம் ஆண்டு இதே அணிகள் விளையாடிய போட்டியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 43 பேர் பலியாகியுள்ளனர்.
அதேபோல், 1991ம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 42 பேர் பலியாகியுள்ளனர்.