பாதசாரிகள் சாலையை கடக்கும் போது மொபைல் போன்கள் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்துவது மற்றும் அவற்றின் மூலம்குறுந்தகவல் அனுப்புவது ஆகியவற்றுக்கு அமெரிக்காவில் உள்ள ஹொனொலுலு நகர நிர்வாகம் தடை விதித்துள்ளது.
ஹவாய் மாகாணத்தின் மிகப்பெரிய நகரான ஹொனொலுலுவில், `கவனமில்லாத நடைபயணம்` காரணமாக ஏற்படும் காயம் மற்றும் உயிரிழப்பு ஆகியவற்றை குறைக்கும் பொருட்டு, வரும் அக்டோபர் மாதம் 25-ஆம் தேதி முதல் இந்த தடை நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
டிஜிட்டல் கேமிரா, மடிக்கணினிகள் மற்றும் மொபைல் போன்கள் ஆகியவற்றை நடந்து செல்லும் போது பயன்படுத்தும் பாதசாரிகளுக்கு, முதலில் 15 முதல் 35 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து இதே தவறை செய்பவர்களுக்கு 99 அமெரிக்க டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும்.
அவசர உதவிக்காக மொபைல் போனிலிருந்து செய்யப்படும் அழைப்புகளுக்கு இந்த தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
அரசு அதிக கட்டுப்பாடுகள் விதித்து வருவதாகக் கூறி, இந்த தடைக்கு சில மக்கள் பிரதிநிதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மின்னணு சாதனங்களை பயன்படுத்திக் கொண்டே சாலையில் கவனம் இல்லாமல் நடந்து சென்றதன் காரணமாக, கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை 11,100 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.
காயமடைந்தவர்களின் இந்த எண்ணிக்கை சமீப ஆண்டுகளாக அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.