புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கோவை குனியமுத்தூரில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது, தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை காயத்ரி ரகுராம் சேரி பிகேவியர் என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
இந்த வார்த்தை குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மனதை புண்படுத்தும் வகையில் இருந்தது. எடிட் செய்து அதை ஒலிபரப்பி இருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
எனவே அவரது பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று காயத்ரி ரகுராம், தனியார் டி.வி. நிறுவனம், தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் ஆகியோர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தோம். ஆனால் 2 வாரத்துக்கும் மேலாகியும் மன்னிப்பு கேட்கவில்லை.
எனவே ரூ.100 கோடி நஷ்டஈடு கேட்டு எனது வக்கீல் மூலம் நேற்று நடிகர் கமல்ஹாசன், நடிகை காயத்ரி ரகுராம், தனியார் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஒருவார காலத்துக்குள் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அவர்கள் மீது சட்டரீதியாக கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து அப்துல் கலாம் மணிமண்டபத்தில் இன்று குரான், பைபிள் வைக்கப்பட்டது குறித்து நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதில் அளித்து கிருஷ்ணசாமி கூறியதாவது,
கலாம் மண்டபத்தில் பகவத் கீதை அருகே குரான், பைபிள் வைத்தது வரவேற்கத்தக்கது.
அதேநேரத்தில் திருக்குறளையும் வைக்க வேண்டும். இந்த விஷயத்தை தமிழக அரசியல் கட்சிகள் தேவையில்லாமல் பெரிதுப் படுத்துகின்றன. மத்திய அரசை விமர்சிக்க வேண்டும். மாநில அரசை வீழ்த்த வேண்டும் என்பதற்காக தமிழக அரசியல் கட்சிகள் எதை எடுத்தாலும் விமர்சிக்கக்கூடாது. நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், மனிதநேயத்திற்கும் எடுத்துக்காட்டாக திகழும் கலாம் பெயருக்கு களங்கம் ஏற்படாதவாறு அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.