மும்பையில் ‘நீல திமிங்கலம் தற்கொலை’ என்ற விபரீத விளையாட்டால் மும்பையைச் சேர்ந்த 9-வது வகுப்பு மாணவன் 5-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளான்.
ரஷியாவில் உருவான ஒரு உயிரைப்பறிக்கும் ஆன்லைன் கேம் ‘நீல திமிங்கலம் தற்கொலை’ என்ற தற்கொலை விளையாட்டு.
‘நீல திமிங்கலம்’ என்ற இணையதள விளையாட்டில் முகம் தெரியாத நபர் யாரோ ஒருவர் கொடுக்கும் கட்டளை அடிப்படையில் நள்ளிரவில் பேய் படம் பார்ப்பது, தன்னுடைய கையை தானே பிளேடுகளால் கிழித்துக் கொள்வது, மொட்டைமாடி சுவர் மீது ஏறி நின்று பாடல் கேட்பது என்பன போன்ற வேலைகளை, போட்டிகளில் பங்கேற்பவர்கள் செய்ய வேண்டும்.
போட்டியாளர்கள் நாள்தோறும் தங்கள் விபரீத விளையாட்டை செல்பி வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என்பது இந்த விளையாட்டு விதியாகும்.
50 நாட்களுக்கு வெவ்வேறு விபரீத விளையாட்டுகள் இந்த நீல திமிங்கலத்தில் இருக்கும். கடைசி கட்டமாக ஐம்பதாவது நாளில் பங்கேற்பாளர்கள் தற்கொலை செய்துகொள்ளும் பணி வழங்கப்படும். இந்த விளையாட்டிற்கு ரஷியாவில் கடந்த 2015-ல் இருந்து 2016 வரை சுமார் 133 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விளையாட்டு இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 29-ந்தேதி மும்பையில் 9-ம் வகுப்பு படிக்கும் 14 வயது மாணவன் ஒருவன் இந்த விளையாட்டின் காரணமாக 5 மாடி கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து தற்கொலை செய்துள்ளான்.
அந்த மாணவன் மொட்டை மாடியின் சுற்றுச்சுவரில் நின்று கொண்டு தனது காலுக்கிடையில் போனை வைத்துக் கொண்டு ஷெல்பி எடுத்துள்ளான். அந்த படத்தை தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளான். அதில் திங்கட்கிழமை நான் பள்ளிக்கூடத்திற்கு வரமாட்டேன் என்று கூறியுள்ளான். பின்னர் குதித்து தற்கொலை செய்துள்ளான்.
அவன் நீல திமிங்கலம் தற்கொலை ஆன்லைன் விளையாட்டால் தற்கொலை செய்து கொண்டானா? என தெரிந்துகொள்ள போலீசார் செல்போனை ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். மேலும், அவனது நண்பன் மற்றும் அவன் குரூப்பில் இணைந்துள்ளவர்களிடமும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சிறுவனின் சாவு குறித்து விசாரிக்கப்படும் என்று மராட்டிய முதல்வர் பட்நாவிஸ் சட்டசபையில் கூறியுள்ளார். ஆன்லைன் விளையாட்டால் அதிகரித்துவரும் தற்கொலையால் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.