நண்பர்களாக வரும் ராஜபாண்டி, ரவீந்திரன், கிருஷ்ணகுமார், ரேணுகா, சுவாதி ஆகிய ஐந்து பேரும் ஒரே கல்லூரியில் படித்து வருகின்றனர். தொடக்கம் முதலே நல்ல நட்பு பாராட்டி வரும் இவர்கள் இறுதிஆண்டு படிப்பை முடித்த பின்னர், நண்பர்கள் ஒவ்வொருவர் வீட்டிற்கும் செல்ல முடிவு செய்கின்றனர்.
அதன்படி 5 பேரில் கிராமத்தில் உள்ள ஒருவரது வீட்டிற்கு முதலில் செல்கின்றனர். அங்கு தங்கியிருந்து அந்த பகுதியில் உள்ள முக்கியமான இடங்களுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் அந்த கிராமத்தில் இருந்து கொஞ்ச தூரத்தில் இருக்கும் சவரிக்காடு என்னும் பகுதிக்கும் செல்ல முடிவு செய்கின்றனர்.
ஆனால், அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று ஊர் மக்கள் பலரும் அவர்களிடம் கூறுகின்றனர். சவரிக்காடு பகுதிக்கு செல்பவர்கள் யாரும் உயிருடன் திரும்ப முடியாது. அங்கு சில மர்மங்கள் இருப்பதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர். அவர்களது பேச்சைக் கேட்காமல், ஐந்து பேரும் சவரிக்காட்டுக்கு சென்று, இரவு முழுவதும் அங்கு தங்கியிருக்கின்றனர்.
இந்நிலையில், நாயகிகளில் ஒருவர் அவசர காரியமாக காட்டிற்குள் செல்கிறாள். ஆனால் போனவள் திரும்ப வரவில்லை. மாறாக திடீரென அவள் கத்தும் சத்தம் மட்டும் கேட்க நண்பர்கள் அனைவரும் அதிர்ச்சியடைகின்றனர். இதையடுத்து நாயகர்களில் ஒருவர் அவளைத் தேடி காட்டிற்குள் செல்கிறார். அவரும் திரும்பி வராததால் ஒவ்வொருவராக அவர்களை தேடி செல்ல அனைவரும் தனித்தனியாக பிரிந்து விடுகின்றனர்.
அந்த இருட்டில் தனித்தனியாக பிரிந்து சென்ற ஐந்து நண்பர்களும் உயிருடன் திரும்பினார்களா? அந்த காட்டிலேயே உயிரிழந்தார்களா? சவரிக்காட்டில் இருக்கும் மர்மம் என்ன? அங்கு என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகர், நாயகி என்று யாரையும் குறிப்பிட்டு கூறமுடியாது. ராஜபாண்டி, ரவீந்திரன், கிருஷ்ணகுமார், ரேணுகா, சுவாதி ஆகிய ஐந்து பேருமே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். நட்பை வெளிப்படுத்துவதில் ஐந்து பேரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர். நடிகர் சூரி ஒரு சில இடங்களில் மட்டுமே வருகிறார் இருப்பினம் சூரி வரும் இடங்கள் கலகலப்பாக இருக்கிறது. அதேபோல் ரோபோ சங்கரும் சிறப்பு தோற்றத்தில் வந்து செல்கிறார். மற்ற துணை நடிகர்கள் அனைவருமே தங்களது பங்குக்கு கதைக்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
எம்.என்.கிருஷ்ணகுமார் ஐந்து நண்பர்களுக்கு இடையேயான நட்பை சிறப்பாக வெளிப்படுத்தியிருந்தாலும், கதையிலும், திரைக்கதையிலும் கோட்டை விட்டிருக்கிறார். காமெடி படம் என்பதற்கு ஏற்றாற்போல் படம் முழுக்க காமெடியில் இல்லை, திகில் என்று பார்த்தால் மிரட்டும்படியான காட்சிகளும் இல்லை. எந்த கண்ணோட்டத்தில் இயக்குநர் இந்த படத்தை எடுத்திருக்கிறார் என்பதை உணர முடியவில்லை. இதில் தொடரும் என்று படத்தை முடித்திருக்கிறார். இதுதான் ரசிகர்களுக்கு திகிலை ஏற்படுத்துகிறது.
ஏ.டி.இந்திரவர்மனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசையும் திகிலை ஏற்படுத்தவில்லை. கே.கோகுலின் ஒளிப்பதிவில் காட்சிகள் நல்ல வந்திருக்கிறது.
மொத்தத்தில் `சவரிக்காடு’ திகிலில்லை.