சத்தீஸ்கர் மாநிலம் தண்டே வாடா மாவட்டம் பல்நார் என்ற இடத்தில் ஆதிவாசி மாணவிகள் படிக்கும் சிறப்பு பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது. இது, விடுதியுடன் கூடிய பள்ளியாகும். மாணவிகள் 500 பேர் இங்கு தங்கி இருந்து படித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் நக்சலைட் தீவிரவாதிகள் நடமாட்டம் அதிகம். எனவே, அவர்களை ஒடுக்குவதற்காக நிரந்தரமாக அங்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை முகாம் உள்ளது.
மத்திய போலீசார் அந்த பள்ளியில் ஆண்டுதோறும் சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடுவது வழக்கம். அப்போது அந்த மாணவிகள் மத்திய படையினருக்கு ராக்கி கயிறு கட்டுவார்கள்.
இந்த விழா கடந்த 31-ந் திகதி அந்த பள்ளியில் நடைபெற்றது. அப்போது மத்திய படை வீரர்கள் சிலர் மாணவிகளிடம் செக்ஸ் குறும்பில் ஈடுபட்டுள்ளனர். மாணவிகள் கழிவறைக்கு சென்று திரும்பிய போது அங்கு நின்றிருந்த வீரர்கள் சிலர் மாணவிகளின் உடலில் கை வைத்து செக்ஸ் குறும்பு செய்திருக்கிறார்கள். இதுபற்றி அந்த மாணவிகள் பள்ளி வார்டனிடம் புகார் கொடுத்தனர். எனவே, அவர் போலீசில் முறைப்படி புகார் அளித்தார்.
இந்த விஷயம் வெளியே தெரிந்ததும் மாவட்ட கலெக்டர் சவுரப் குமார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, மத்திய படை டி.ஐ.ஜி. ஆகியோர் சென்று பள்ளியில் விசாரித்தனர்.
நடந்த சம்பவம் உண்மை என்று தெரிந்தது. அதையடுத்து உள்ளூர் போலீசார் அடையாளம் தெரியாத மத்திய படை வீரர்கள் மீது சிறுமிகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தல் (போஸ்கோ பிரிவு) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
மேலும் இதுபற்றி விசாரிப்பதற்காக போலீஸ் அதிகாரிகள், துணை கலெக்டர்கள், கல்வி அதிகாரிகள் கொண்ட 5 பேர் குழு நியமிக்கப்பட்டுள்ளது. பள்ளியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா மூலமும் ஆய்வு செய்து வருகின்றனர்.