ரவிதேஜா தனது படிப்பை முடித்துவிட்டு வேலை ஏதுமின்றி ஜாலியாக ஊர்சுற்றி வருகிறார். அவரது போக்கு பிடிக்காத ரவிதேஜாவின் பெற்றோர் அவருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்கின்றனர். அதற்காக பெண் பார்க்கவும் செல்கின்றனர். ஆனால் மணமகளுக்கு ரவிதேஜாவை பிடிக்கவில்லை. ஏன் என்று காரணம் கேட்க, தான் திருமணம் செய்யும் நபர் ஊரிலேயே பிரபலமான நபராக இருக்க வேண்டும் என்று கூறுகிறாள்.
இதையடுத்து தான் ஒரு பெரிய ஆளாக மாறிவருவதாகக் கூறி ரவிதேஜா அங்கிருந்து கிளம்பிவிடுகிறார். அதற்காக திட்டம் ஒன்றும் போடுகிறார். அவரது திட்டத்தின்படி, பேட்டி அளித்துக் கொண்டிருந்த அமைச்சர் ஒருவர் மீது கல்லை தூக்கி வீசுகிறார். அமைச்சர் மீது கல்லை வீசயதால் போலீசார் அவரை கைது செய்து அடிக்க, பப்ளிசிட்டிக்காகவே தான் அவ்வாறு செய்ததாக ரவிதேஜா கூறுகிறார். இதனால் கோபமடையும் அமைச்சர் ரவிதேஜாவை நேரில் பார்த்து பேசுகிறார். அதில் ரவிதேஜாவுக்கு பயமே இல்லை என்பதை உணர்ந்து ரவிதேஜாவை தன்னுடன் அழைத்து செல்கிறார்.
இந்நிலையில், உள்துறை அமைச்சரான ராவ் ரமேஷின் மகள் ராஷி கண்ணா வெளிநாட்டில் இருந்து இந்தியா வருகிறாள். இந்தியாவில் தனது எதிரிகளால் தன் மகளுக்கு எந்த பிரச்சனையும் வந்துவிடக் கூடாது என்ற யோசனையில் இருக்கும் ராவ் ரமேஷிடம், ரவிதேஜா குறித்து அந்த அமைச்சர் கூற, தனது பெண்ணுக்கு துணையாக வர ரவிதேஜாவை அழைக்கிறார்.
இதையடுத்து, ரவிதேஜா மேலும் பிரபலமடைகிறார். இந்நிலையில், இந்தியா வரும் ராஷி கண்ணாவுக்கு தொல்லை கொடுக்கும் சிலரையும் அடித்து துவம்சம் செய்கிறார். இதனால் ராஷிக்கு, ரவி தேஜா மீது காதல் வந்துவிடுகிறது. தனது மகளின் ஆசையை புரிந்து கொண்ட ராவ் ரமேஷ், தனது மகளை ரவிதேஜாவுக்கு திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்கிறார். அதனை தனது வீட்டு நிகழ்ச்சி ஒன்றில், முதலமைச்சர், அனைத்து
அமைச்சர்கள், பிரபலங்கள் முன்னிலையில் அறிவிக்கிறார்.
தனது திட்டத்தின் படியே காயை நகர்த்தும் ரவிதேஜா, ராவ் ரமேஷின் இந்த அறிவிப்பில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும், தான் ஒரு பெண்ணை காதலிப்பதாக கூறுகிறார் ஆனால் அந்த பெண் யார் என்பதை கூறாமல் இருக்கும் ரவிதேஜாவிடம், அந்த பெண் யாராக இருந்தாலும் திருமணம் செய்து வைப்பதாக முதலமைச்சர் வாக்குறுதி கூற, முதலமைச்சரின் மகளான தமன்னாவை தான், ரவிதேஜா ஒருமனதாக காதலிப்பதாக கூறிவிடுகிறார். ரவிதேஜாவின் இந்த அறிவிப்பை கேட்டு முதலமைச்சர் உட்பட அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ரவி தேஜா ஏன் இவ்வாறு கூறினார்? அதன் பின்னணியில் இருக்கும் உள்நோக்கம் என்ன? கடைசியில் ரவிதேஜா தமன்னா உடன் இணைந்தாரா? ராஷி கண்ணாவை மணந்தாரா? என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.
ரவிதேஜா தனக்கே உரிய கிண்டல் கலந்த பேச்சுடன் மக்களை ரசிக்க வைத்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும் மிரள வைக்கிறார். அவரது படபட பேச்சிலும், காதல் காட்சிகளிலும் சிறப்பாக நடித்திருக்கிறார். தமன்னா வழக்கம் போல தனது கதாபாத்திரத்திற்கு தேவயானதை சிறப்பாக கொடுத்திருக்கிறார். காதல், கவர்ச்சி, ரொமான்ஸ் என அனைத்திலும் ராஷி கண்ணாவின் பங்கு அளப்பறியது.
ராவ் ரமேஷ், தனிகெல்லா பரணி, பூசனி கிருஷ்ண முரளி, பிரம்மானந்தம் என அனைவருமே முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
படத்தின் தலைப்புக்கு ஏற்ப ரவிதேஜாவை ஒரு புலியாக காட்டியிருக்கிறார் இயக்குநர் சம்பந்த நந்தி. சண்டைக்காட்சிகளில் மிரள வைத்திருக்கிறார். குடும்பம், காதல், ரொமான்ஸ், அரசியல் என ஒரு கலவையாக கொடுத்திருக்கிறார். படத்தின் கதைக்கு ஏற்ப திரைக்கதை அமைத்திருப்பது சிறப்பு.
பீம்ஸ் சீசிரோலியோவின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். பின்னணி இசையில் பட்டையை கிளப்பி இருக்கிறார். சவுந்தர்ராஜனின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `பெங்கால் டைகர்’ விறுவிறு ஓட்டம்.