பிரபல நடிகை ஓடும் காரில் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட பிறகு மலையாள பட உலகில் நடிகர்கள் அணி, நடிகைகள் அணி என்று பிளவு ஏற்பட்டுள்ளது. மலையாள நடிகர்கள் சங்கமான ‘அம்மா’வுக்கு எதிராக நடிகைகள் தங்களுக்கு என்று தனியாக ஒரு அமைப்பையும் உருவாக்கி உள்ளனர்.
இதன்பிறகு நடிகைகள் அமைப்பை சேர்ந்தவர்கள் மலையாள படஉலகில் நடிகைகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் தொந்தரவுகள் பற்றி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார்கள்.
இதற்கு பதில் அளித்து நடிகர் சங்க தலைவர் இன்னசென்ட் கருத்து தெரிவிக்கும் போது நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைத்து யாரும் கட்டாயப்படுத்துவது கிடையாது. சில நடிகைகளே பட வாய்ப்புக்காக விருப்பப்பட்டு அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று கூறியிருந்தார். இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்னசென்ட்டுக்கு சில நடிகைகள் கண்டனமும் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் மலையாள படஉலகில் இளம் நடிகையாக உள்ள ஹிமா சங்கரும் இது தொடர்பாக பரபரப்பு புகாரை கூறி உள்ளார். கொச்சியில் நடந்த ஒரு சினிமாபட விழாவில் கலந்துகொண்ட நடிகை ஹிமா சங்கர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நான் நடிப்பு பயிற்சி கல்லூரியில் படித்துக் கொண்டு இருந்தபோது மலையாள சினிமா உலகை சேர்ந்த 2 பேர் என்னை சந்தித்து பேசினார்கள். அப்போது படுக்கையுடன் நடிப்பு என்ற நிபந்தனையை ஏற்றுக் கொண்டால் உங்களுக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்றனர். முதலில் எனக்கு அவர்கள் கூறியது புரியவில்லை. பின்னர் அவர்களே அதை விவரித்தபோது அதிர்ச்சி அடைந்தேன். அந்த நபர்களிடம் அப்படிப்பட்ட வாய்ப்பு எனக்கு தேவையில்லை என்று கூறி திருப்பி அனுப்பிவிட்டேன்.
எல்லோரும் பெண்கள் தங்கள் கருத்துக்களை சமூகத்தில் தைரியமாக கூற வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் பெண்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தால் உடனே அவர் மீது அவர்களே பாய்ந்துவிடுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.