போருக்கு செல்லும் தனது தந்தையை பார்த்த இளவரசர் பாலகிருஷ்ணா, தனது அம்மா ஹேமா மாலினியிடம் ஏன் போர் நடக்கிறது. அதற்கான காரணம் என்ன உள்ளிட்ட பல கேள்விகளை கேட்கிறார். பாலகிருஷ்ணாவின் சிரத்தை பார்த்து வியந்த ஹேம மாலினி ஒவ்வொரு பகுதியையும் ஒவ்வொருவர் ஆள்வதால் தான் சாம்ராஜியங்களுக்கு போர் வருகிறது என்று கூறுகிறார்.
அப்படியென்றால் ஒரே மன்னனே மொத்த நாட்டையும் ஆள வேண்டியது தானே என்று பாலகிருஷ்ணா கேட்க, அப்படிபட்ட ஆண்மகன் இன்னமும் பிறக்கவில்லை மகனே என்று ஹேம மாலினி கூறுகிறார். நான் பிறந்துவிட்டேன் தாயே. இந்த மொத்த நாட்டையும் ஒரே குடையின் கீழ் நான் ஆள்வேன். அதன்பின்னர் போர், உயிரிழப்பு உள்ளிட்ட மக்களுக்கு ஆபத்தான காரியங்கள் ஏதும் நிகழாமல் நான் பார்த்துக் கொள்வேன் என்று தாயின் மீது ஆணையிட்டு சத்தியம் செய்கிறார்.
அவ்வாறாக நாட்டை ஒரு குடையில் ஆள்வதற்கான முயற்சிகளில் ஈடுபடுவதுடன், அதற்காக தன்னை தயார்படுத்திக் கொள்கிறார். அவரது ஆட்சியில் தெற்கு பகுதியில் உள்ள நாடுகள் அனைத்தும் பாலகிருஷ்ணாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. இதையடுத்து வடக்கு தேசங்களை ஆளும் நாகப்பா என்ற மன்னரின் கீழ் இருக்கும் அனைத்து சாம்ராஜ்யங்கயைும் தனக்கு கீழ் கொண்டு வருவதற்காக அம்மன்னனுக்கு ஓலை ஒன்று அனுப்புகிறார்.
அந்த ஓலையில் நாகப்பாவின் வாளை தன்னிடம் ஒப்பித்து தனக்கு கீழ் ஆட்சி செலுத்தச் சொல்லி குறிப்பிட்டிருக்கிறார். அந்த ஓலையால் கடும் கோபத்திற்கு ஆளாகும் நாகப்பா மன்னன், பாலகிருஷ்ணாவின் தாத்தாவை என்னுடைய தாத்தாவே போரில் வீழ்த்தினார். பாலகிருஷ்ணா அப்பாவை தன்னுடைய அப்பாவே வீழ்த்தினார். அவனை ஒழுங்காக தன்னிடம் சரணடைய சொல் என்று கூறுகிறார். மேலும் பாலகிருஷ்ணாவின் மகனை தன்னிடம் ஒப்படைத்து நிம்மதியாக ஆட்சி புரியச் சொல். இல்லையென்றால் அவனுக்கு தான் பிரச்சனை என்று சொல்லி விடுகிறார்.
இந்நிலையில், தனது மகனை நாகப்பாவிடம் அனுப்பி வைக்கும் கௌதமி புத்ர சாதகர்னியாகிய பாலகிருஷ்ணா, தன் மகனை எப்படி மீட்க வேண்டும் என்று தனக்கு தெரியும் என்று கூறிவிடுகிறார். தனது மகன் உள்ளிட்ட நாகப்பாவிடம் சிக்கி அவதிப்படும் மற்ற நாட்டு மன்னர்களின் இளவரசர்களை காப்பாற்ற வேண்டும் என்று முடிவு செய்கிறார். இந்நிலையில், ஆங்கிலேயர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்சி அமைக்க முடிவு செய்கின்றனர்.
இந்நிலையில், வட திசை படைகளுக்கும் தென் திசை படைகளுக்கும் இடையே போர் நடக்கிறது. அந்த போரில் யார் வென்றார்கள்? தனது மகன் உள்ளிட்ட மற்ற இளவரசர்களையும் கௌதமி புத்ர சாதகர்னி எப்படி மீட்கிறார்? ஆங்கிலேயர்கள் ஏதேனும் சூழ்ச்சி செய்தார்களா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
பாலகிருஷ்ணா நடிக்கும் 100-வது படம் கௌதமி புத்ர சாதகர்னி. தனது 100-வது படத்தில் எந்த அலட்டலும் இல்லாமல், ஒரு ராஜாவுக்கு தேவையான உடலுடனும், பேச்சுடனும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பாலகிருஷ்ணாவின் மனைவியாக, ராணிக்கு உண்டான தனித்துவத்துடன் ஸ்ரேயா சரண் சிறப்பாக நடித்திருக்கிறார். பாலகிருஷ்ணாவின் அம்மாவாக ஹேம மாலினி அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சிவராஜ்குமார், ஃபரா கைராமி, ரவி பிரகாஷ், தனிகெல்லா பரணி, சுபலேகா சுதாகர், கபீர் பேடி உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
கௌதமிபுத்ர சாதகர்னியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி குறுகிய நாளில் இந்த படத்தை பிரமாண்டமாக இயக்கியிருக்கிறார் கிரிஷ். நாடு முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட கௌதமிபுத்ர சாதகர்னியின் வரலாற்றை அனைவரும் தெரிந்து கொள்ளும் விதமாக இந்த படத்தை உருவாக்கி இருப்பதற்காக கிரிஷ்க்கு பாராட்டுக்கள். படத்தின் வசனங்கள் எளிதில் புரியும்படி எழுதியிருப்பது சிறப்பு.
தெலுங்கில் இருந்து டப் செய்யப்பட்டுள்ளதால், சிரந்தன் பாத் இசையில் பாடல்கள் பெரிதாக சொல்லும்படியாக இல்லை. எனினும் கேட்கும்படியாக இருக்கிறது. பின்னண இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. வி.எஸ்.ஞானசேகரின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `கௌதமிபுத்ர சாதகர்ணி’ வரலாற்று காவியம்.