உலகில் தற்போது நடைமுறையில் உள்ள நிறைய மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட விலங்குகள் பெரும்பாலும் உடல் உறுப்பு மாற்றுக்கான பற்றாக்குறையை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
37 பன்றிகளின் டி என் ஏவில் மறைந்திருந்த வைரஸ்களை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக அகற்றியுள்ளதன் மூலம், மனிதர்களுக்கு பன்றியின் உடல் உறுப்புகளை மாற்றாக பொருத்துவதில் இருந்த மிகப்பெரிய சிக்கல்களில் ஒன்றுக்கு வெற்றிகரமாக தீர்வை கண்டறிந்துள்ளனர்.
பன்றியின் உடலுறுப்புகள் மனித உடலால் நிராகரிக்கப்படுவது என்பது ஒரு மிகப்பெரிய சவால் என்று இ ஜெனிசிஸில் உள்ள குழு ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், இந்த சமீபத்திய சாதனை ஒரு நம்பிக்கைக்குரிய மற்றும் அற்புதமான முதல்படி என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
சைன்ஸ் என்ற சஞ்சிகையில் வெளியாகியுள்ள இந்த ஆய்வில், ஒரு பன்றியின் தோலில் உள்ள செல்களிலிருந்து தொடங்குகிறது.
பரிசோதனை செய்ததில் சுமார் 25 பெர்வ் எனப்படும் போர்கைன் எண்டோஜீனஸ் ரெட்ரோவைரஸ்கள் அடையாளம் காணப்பட்டன. அவை பன்றியின் மரபணு குறியீட்டிற்குள் ஒளிந்து கொண்டிருந்தன.
மனித மற்றும் பன்றியின் திசுக்களை ஒன்றாக கலக்கும் ஆராய்ச்சியின் போது, மனித திசுக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்காக இந்த ரெட்ரோவைரஸ்கள் தப்பிக்கலாம் என்பது வெளிப்பட்டது.
அப்போதுதான், அராய்ச்சியாளர்கள் ‘கிரிஸ்பர்’ என்னும் மரபணுக்களை நீக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இந்த 25 போர்கைன் எண்டோஜீனஸ் ரெட்ரோவைரஸ்களை நீக்கியுள்ளனர்.
அதன்பிறகு குளோனிங் தொழில்நுட்பத்தை கொண்டு பன்றி ஒன்றின் முட்டைக்குள் மரபணு பொருட்களை வைத்து கருமுட்டைகள் உருவாக்கப்படுகின்றன.
குளோனிங் தொழில்நுட்பத்தை கொண்டுதான் டோலி என்ற ஆடு முன்பு உருவாக்கப்பட்டது.
இந்த சிக்கலான நடைமுறை பயனற்றது என்றாலும், ஆரோக்கியமான 37 பன்றிகுட்டிகள் புதிதாக பிறந்தன.
”இவைதான் போர்கைன் எண்டோஜீனஸ் ரெட்ரோவைரஸ்கள் இல்லாத பன்றிகுட்டிகள்,” என்று ஹார்வர்ட் பல்கலைக்கழகம் மற்றும் ஈஜெனிசிஸ் நிறுவனத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான முனைவர் லுஹான் யாங் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
அதிகளவில் மரபணு மாற்றங்கள் செய்யப்பட்ட விலங்குகளிலேயே இவற்றில்தான் அதிக எண்ணிக்கையில் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமானோருக்கு மாற்று அறுவை சிகிச்சைக்காக உடலுறுப்பு தேவைப்படுகிறது. பிரிட்டனில் சுமார் 6,500 பேர் உடலுறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருப்பு பட்டியலில் இருக்கின்றனர்.
பிபிசியிடம் பேசிய ஆராய்ச்சியாளர் யாங், ”ஆராய்ச்சியின் ஆரம்பகால கட்டத்தில் நாங்கள் இருப்பது எங்களுக்கு தெரிகிறது.
உடலுறுப்புகள் பற்றாக்குறை இல்லாத உலகு என்ற தீர்க்கமான பார்வையை நாங்கள் கொண்டிருக்கிறோம் என்பது எங்களுக்கு தெரியும். அதுதான் சவலாக இருக்கிறது. ஆனால், மலைப்போல குவிந்துள்ள தடைகளை கடப்பதிலும் இந்த சவால்கள்தான் ஊக்கமாக இருக்கின்றன.” என்றார்.
மனித நோய் எதிர்ப்பு அமைப்பு பன்றி உடலுறுப்புகளை அதிகம் ஏற்றுக்கொள்ள மேலும் மரபணு மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க குழு ஆராய்ந்து வருகிறது.