இந்தியாவின் சுதந்திர தினத்திற்கு ஒரு நாள் முன்னதாக, ஆகஸ்ட் 14-ஆம் திகதி பாகிஸ்தான் தனது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறது.
இரண்டு முறை போருக்கு வித்திட்ட சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியால் இரண்டு நாடுகளின் உறவிலும் பதற்றம் நீடித்து வருகிறது.
இந்நிலையில், இரு நாட்டின் தேசிய கீதங்களையும் இணைத்து, அமைதியை அதிகரிக்கும் நம்பிக்கையில் ஒரு புதிய பாடல் வீடியோ ஒன்று உருவாகப்பட்டுள்ளது.
“அமைதி கீதம்” என்று அழைக்கப்படும் அந்த புதிய பாடல், இந்தியா மற்றும் பாகிஸ்தான் பாடகர்களால் பாடப்பட்டுள்ளது.
இரு நாட்டிற்குமான அமைதியை ஆதரிக்கும் முகநூல் குழுவான `வாய்ஸ் ஆஃப் ராம்` குழு இதனை சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளது. இரண்டு நாடுகளையும் சேர்ந்த சமூக ஊடக பயன்பாட்டாளர்கள் இந்த பாடலையும் அதற்கு பின்னுள்ள உணர்வையும் பாராட்டியுள்ளனர்.
“நமது எல்லையை கலைக்காக திறந்தால் அமைதியும் அதனுடன் வரும்” என்ற வாசகத்துடன் அந்த வீடியோ தொடங்குகிறது.
பின்பு கலைஞர்கள் இந்தியாவின் தேசிய கீதமான `ஜன கன மன` மற்றும் பாகிஸ்தானின் தேசிய கீதமான `பாக் சர்சமின்` பாடலை பாடுகின்றனர் அதில் சில பாடர்கள் ஸ்டுடியோவிலிருந்தும், சிலர் வெளிபுறத்திலிருந்தும் பாடுகின்றனர்.
இதற்கு முன் ஆகஸ்ட் 11-ஆம் தேதி, பாகிஸ்தானின் தேசிய கீதத்தை பாடி பகிரப்பட்ட `வாய்ஸ் ஆஃப் ராம்` குழுவின் மற்றொரு வீடியோ 468,000 பார்வையாளர்களை பெற்றுள்ளது
பாகிஸ்தானின் `டான்` செய்தித்தாள் “இது ஓர் ஆச்சரியமான பரிசு” என்றும் “இதை கேட்பது மகிழ்ச்சியளிக்கிறது” என்றும் தெரிவித்துள்ளது. டிவிட்டரில் இந்த முயற்சிக்கு பலர் வரவேற்பு அளித்துள்ளனர்.
இந்த வீடியோ தொடர்பாக, ‘வாய்ஸ் ஆஃப் ராம்’ குழுவின் தலைவரும், இயக்குநர் மற்றும் சமூக பணியாளருமான ராம் சுப்ரமணியன் ‘கேட்ச் நியுஸ்’ என்ற இந்திய வலைத்தளத்தில் குறிப்பிடுகையில், “பலர் அமைதி பற்றி பேச அஞ்சுகின்றனர் ஆனால் அந்த பயம் தேவையற்றது” என்று தெரிவித்துள்ளார்.
“என்னை பொறுத்தவரை இந்த வீடியோ ஒரு புது தொடக்கமாக இருக்கும்; அமைதியை நோக்கிய ஒரு சிறு அடி” என சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
“இந்த வீடியோ பாகிஸ்தானில் வைரலாகும் என்று நம்புகிறோம். சில இந்தியர்கள் நாங்கள், அமைதியை விரும்புகிறோம்; இரு நாட்டினரும் ஒருவருக்கு ஒருவர் அளித்திடும் சிறந்த சுதந்திர தின பரிசாக அது இருக்கும்.” என இந்தியாவைச் சேர்ந்த கல்பேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
“இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இதனை கேட்பதற்கு ஆத்மார்த்தமாகவும், அதீத அமைதியாகவும் உள்ளது, பாகிஸ்தானிலிருந்து வாழ்த்துக்கள்” என பாகிஸ்தான் கராச்சியைச் சேர்ந்த ஒசாமா ஃபரூக்கி, தெரிவித்துள்ளார்.