தாய், தந்தையை இழந்த நாயகன் கவித்ரன் சென்னையில் உள்ள குடிசைப் பகுதியில் வாழ்ந்து வருகிறார். கானா பாடல்களை பாடுவதையே தொழிலாக கொண்டுள்ள கவித்ரன் அதனை வைத்தே தனது பிழைப்பை நடத்தி வருகிறார். மேலும் தனக்கு எப்போது சாவு வரும் என்றும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவரது நண்பர்களாக வியட்நாம் வீடு சுந்தரம், பாண்டு, நெல்லை சிவா வருகின்றனர். அவர்களுக்கு மது வாங்கி கொடுத்து அவர்களுடன் சேர்ந்து தண்ணி அடிப்பதையே பொழுதுபோக்காக கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த நாயகியான பவிஷாவின் அம்மா இறந்து போக, அங்கு கானா பாடுபவராக கவித்ரன் வருகிறார். தாயை இழந்ததால் பவிஷா, இனி என்னனென்ன பிரச்சனைகளை சந்திப்பாள். அவளது மனக்கஷ்டம் எப்படி இருக்கும் என்பதையே பாட்டாக பாடுகிறார். தாயை பிரிந்த பவிஷாவுக்கு சில நாட்கள் கழித்து, கவித்ரனின் நினைவும், அவன் பாடிய பாடலும் நினைவிற்கு வருகிறது. மேலும் அவளது நினைவை விட்டு செல்லாமலும் இருக்கிறது.
இதையடுத்து கவித்ரனை நேரில் சென்று பார்க்கும் பவிஷா, அவரை காதலிப்பதாக கூறுகிறாள். அவளது காதலுக்கு கவித்ரன் மறுப்பு தெரிவிக்கிறார். இருப்பினும் பவிஷா, கவித்ரனையே சுற்றி வருகிறார். இந்நிலையில், கவித்ரனை தனது வழிக்கு கொண்டுவர கவித்ரனை தனது வீட்டிற்கு வரவைக்கிறார் அங்கு கவித்ரன் – பவிஷா இடையே கசமுசா நடந்துவிடுகிறது. இதையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று பவிஷா கூறுகிறார். ஆனால் பவிஷாவை திருமணம் செய்ய கவித்ரன் மறுப்பதால் இவர்களது பிரச்சனை காவல் நிலையம் வரை செல்கிறது.
கடைசியில் கவித்ரன் – பவிஷா இருவரும் இணைந்தார்களா? அல்லது அவரது கொள்கையிலேயே தீவிரமாக இருந்தாரா? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.
சேரி பகுதியில் வாழும் ஒரு இளைஞனாக கவித்ரன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வயதான தனது நண்பர்களுடன் அவர் அடிக்கும் லூட்டி ரசிக்கும்படி இருக்கிறது. அதேபோல் நாயகியான நடித்திருக்கும் பவிஷாவுக்கு அழுத்தமான கதாபாத்திரம். எதையும் துணிச்சலுடன் எதிர்கொள்ளும் நாயகியாக சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி வியட்நாம் வீடு சுந்தரம், பாண்டு, நெல்லை சிவா, கிரேன் மனோகர், வடிவுக்கரசி என அனைவருமே முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
பெற்றோரை இழந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே நடக்கும் கதையை காமெடி கலந்து கூறியிருக்கிறார் நோவா. படத்திற்கு நல்ல கதை அமைந்திருந்தாலும், திரைக்கதையில் கொஞ்சம் மெனக்கிட்டிருக்கலாம் என்பது ரசிகர்களின் கருத்தாக இருக்கிறது. கதாபாத்திரங்கள் பேசும் வசனங்கள் சிறப்பாக இருந்தன.
ஜே.கே.செல்வாவின் இசையில் கானா பாடல்கள் ரசிக்கும்படி இருக்கிறது. வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `நம்ம கத’ கானா கதை.