கோயம்புத்தூரில் பொள்ளாச்சிக்கு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த தம்பதிகளான ஷங்கர் – மீனு கார்திகா சொந்த ஊரில் இருந்து நகரத்து வருகின்றனர். அங்கு தங்களது வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் நடத்தி வருகையில், திடீரென அவர்களது வாழ்க்கையை புரட்டி போடும் சம்பவம் ஒன்று நிகழ்கிறது. மீனு கார்த்திகாவை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்து விடுகின்றனர். கிராமத்திலிருந்து சென்னை வரும் இளைஞன் ஒருவர் எதிர்பாராத வகையில் இந்த கொலைப்பழியில் சிக்கிக் கொள்கிறான்.
அவளது கொலையில் இருக்கும் மர்மம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், மீனு கார்த்திகா வேறு ஒரு பெண்ணின் உடலில் புகுந்து தன்னை கொன்றவர்களை பழிவாங்க துடிக்கிறது. இதற்கிடையே நடக்கும் பல்வேறு பிரச்சனைகளும், அதனால் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. செய்யாத குற்றத்துக்கு பழிசுமக்கும் அந்த இளைஞன் அதிலிருந்து மீண்டானா? கொலை செய்யப்பட்ட மீனு கார்த்திகா பேயாக மாறி கொன்றவர்களை பழிவாங்கினாளா? என்பதே படத்தின் மீதிக்கதை.
முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ஷங்கர், விஷ்ணு ஹசன், மீனு கார்த்திகா, ப்ரீத்தி, அங்கனா ராய் மற்றும் காம்னா சிங் உள்ளிட்டோரின் நடிப்பு சிறப்பாக இருக்கிறது. கராத்தே சிவவாஞ்சி, நியாமத்கான், தயாரிப்பாளர் நாமக்கல் கே.சண்முகம், அஸ்வின்குமார் உள்ளிட்டோரின் நடிப்பும் ரசிக்கும்படி இருக்கிறது. அதேபோல் கஞ்சா கருப்பு, மதன் பாப், மீரா கிருஷ்ணன், சித்ரா லட்சுமணன், பரவை முனியம்மா, நந்தகுமார் உள்ளிட்ட பலரும் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.
அநியாயமாக கொலை செய்யப்பட்ட ஒரு பெண்ணின் ஆவி, வேறொரு பெண்ணின் உடம்புக்குள் புகுந்து கொண்டு தன்னை கொலை செய்தவர்களை பலிவாங்குவதை கதையம்சமாக கொண்டு விஷ்ணு ஹசன் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இயக்குநர் திரைக்கதையில் கோட்டை விட்டிருக்கிறார். பேய் வரும் இடங்கள் பயமின்றி, சிரிப்பை தூண்டும்படி இருக்கிறது.
சதீஷ் சக்ரவர்த்தியின் பின்னணி இசை ஓரளவு பயத்தை தூண்டினாலும், பெரிதான தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. பி.கே.எஸ்.தாஸின் ஒளிப்பதிவில் காட்சிகள் தெளிவாக வந்திருக்கிறது.
மொத்தத்தில் `உள்ளம் உள்ளவரை’ பயமில்லை.