நடிகர் கமல்ஹாசன் நற்பணி இயக்க நிர்வாகி ஒருவரது இல்ல திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் பேசிய கமல்,
அரசியல் சூழலை இப்படியே விட்டு வைக்காமல் அதனை மாற்ற வேண்டியது நம் கடமை. ஓட்டுக்காக பணம் பெற்று திருடர்களை அனுமதித்து விட்டோம். தமிழகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள தொடர்ந்து போராட வேண்டும். இது திருமண விழா அல்ல. ஆரம்ப விழா என்று கூறியுள்ளார்.
கமல்ஹாசன் சமீபகாலமாக தமிழக அரசை விமர்சித்து வருகிறார். தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் நிலவுவதாக அவர் கூறியதற்கு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கண்டனம் தெரிவித்தனர். எனினும் கமல்ஹாசன் தொடர்ந்து டுவிட்டரில் அரசை விமர்சித்து வந்ததோடு தமிழகத்தில் நிலவும் ஊழல் குறித்து தனது ரசிகர்கள் ஆதாரங்களுடன் லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் செய்யுமாறு கூறினார். அதையேற்று ரசிகர்களும் ஊழல் பட்டியல் தயாரித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு அனுப்பினர்.
அ.தி.மு.க.வின் இரு அணிகளும் இணைந்த அன்று தமிழன் தலையில் கோமாளிக்குல்லா என்று விமர்சித்திருந்தார். அவரது அரசியல் பேச்சுகளுக்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.