தனக்கென தனி நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. சில கேரக்டர்களை நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு பண்ணினால் மட்டுமே எடுபடும் என்கிற அளவுக்கு மதுரை மாவட்ட கிராமத்து பாஷையில் வெள்ளந்தியாக பேச இவரைவிட்டால் ஆளில்லை என்றே சொல்லலாம்.
கொஞ்ச நாட்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்று வந்ததில் விழுந்துவிட்ட இடைவெளியை மீண்டும் நிரப்ப ஆரம்பித்துள்ளார் கஞ்சா கருப்பு. அதிலும் சமீபத்தில், 2009 ஆம் வருடத்தின், தமிழக அரசின் சிறந்த காமெடியனுக்கான விருது வழங்கப்பட்டதில், கூடுதல் உற்சாகமாகி உள்ளார் கஞ்சா கருப்பு.
தற்போது ‘சந்தனத்தேவன்’, ‘அருவா சண்ட’, ‘கிடா விருந்து’ உட்பட சில படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள ‘குரங்கு பொம்மை’ படம் தற்போது ரிலீஸாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்ததாக ‘பள்ளிப்பருவத்திலே’ படம் ரிலீசாக இருக்கிறது.
பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியவர்களில் ஆர்த்தி, ஜூலி என ஒவ்வொருவராக சிலர் மீண்டும் உள்ளே போகிறார்களே.. கஞ்சா கருப்புவும் அப்படி மீண்டும் செல்வாரா என்று கேட்டால், “ஆளைவிடுங்கப்பா சாமி.. அது வேற ஏரியா.. கொஞ்சம் சூதானமாத்தான் நடந்துக்கணும்.. நமக்குலாம் அது செட்டாகதுப்பா” என சிம்பிளாக முடித்துக்கொள்கிறார்.
பிக் பாஸ் ஷோவே ஒரு ஸ்கிரிப்ட் தான். அதன்படிதான் அங்குள்ளவர்கள் நடிக்கிறார்கள். நடந்து கொள்கிறார்கள் என சொல்லப்படுகிறதே என கேட்கும் முன்னே நம்மை மறித்து, “அதெல்லாம் சும்மா சொல்றவங்க எதுனா சொல்லுவாங்க பாஸ். அந்த வீட்டுக்குள்ளாற இருக்கிறவங்க அவங்கவங்க நடந்துக்கிறது எல்லாமே அவங்களா தீர்மானிக்கிறதுதான். ஸ்கிரிப்ட்டா இருந்தா, நடிப்பா இருந்தா அடுத்த செகன்ட்லயே வெளிய தெரிஞ்சிருமே..” என்கிறார்.