அவுஸ்திரேலியாவில் ஓர் ஈமச்சடங்கு மையத்துக்குள் நுழைந்த மான் ஒன்று அங்கு நம்பமுடியாத அளவுக்கு சேதாரம் செய்தது.
மேலைச் சமூகங்களில் ஈமச்சடங்கு மையங்கள் என்பவை, இறந்தவர்களுக்கான இறுதிச் சடங்குகளை நடத்துகிற வணிக நிறுவனங்கள்.
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள இப்படிப்பட்ட ஒரு நிறுவனத்தின் கண்ணாடி ஜன்னல் ஒன்றை நொறுக்கிவிட்டு, அதன் ஊழியர் ஒருவரையும் கட்டடத்துக்குள் விரட்டிச் சென்ற அந்த மான், 20 நிமிடத்துக்கு உள்ளே இருந்த அறைகலன்கள் (பர்னீச்சர்) மற்றும் சுவர் போன்றவற்றை சேதம் செய்தது.
ஒருவழியாக ஊழியர்கள் அதனை ஓர் அறைக்குள் அடைத்து களேபாரத்தை முடிவுக்குக் கொண்டுவந்தனர்.
வனவிலங்கு வல்லுநர்கள் பிறகு அந்த மானை வேறு இடத்துக்குக் கொண்டு சென்றனர் என்று போலீஸ் கூறுகிறது. டாபின் பிரதர்ஸ் என்ற அந்த மையத்தில் இருந்து அந்த மானைக் வெளியே கொண்டு செல்ல ஆறு வன அலுவலர்கள் தேவைப்பட்டனர் என்று மையத்தின் மேலாண்மை இயக்குநர் ஜேம்ஸ் மெக் லியோட் தெரிவித்தார்.
“20 நிமிடத்தில் செய்யப்பட்ட இந்த சேதாரத்தை என்னால் நம்ப முடியவில்லை. கருவிகள், தரைவிரிப்புகள், அறைகலன்கள் ஆகியவற்றை உடனே மாற்றியாகவேண்டும்,” என்கிறார் என்கிறார் அவர்.
இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்கிறது போலீஸ்.