மராட்டிய மாநிலத்தில் பெண் என்ஜினீயரை கற்பழித்து கொலை செய்து அவரது உடலை கர்நாடக மாநிலத்தில் உள்ள கால்வாயில் வீசியுள்ள கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மராட்டிய மாநிலம் நாக்பூரை சேர்ந்த 22 வயது இளம்பெண், மும்பை அந்தேரியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தோழியை சந்திக்க புனே சென்று இருந்தார். தோழியை சந்தித்த பிறகு பெண் என்ஜினீயர் மும்பை திரும்ப இருந்தார். அப்போது நாக்பூரில் இருந்து பெண் என்ஜினீயரின் ஆண் நண்பர்களான நிக்லேஷ் மற்றும் நீலேஷ் ஆகியோர் காரில் வந்தனர். எனவே பெண் என்ஜினீயர் அவர்களுடன் காரில் மும்பை வந்தார்.
நள்ளிரவு ஆனதால் நிக்லேஷ், பெண் என்ஜினீயரை தானே மாவட்டம் அம்பர்நாத்தில் உள்ள நண்பர் அக்ஷய் வீட்டில் தங்கிச்செல்லலாம் என கட்டாயப்படுத்தினார். இதையடுத்து பெண் என்ஜினீயர், நிக்லேசுடன் நண்பர் வீட்டில் தங்கினார். அவர்களுடன் வந்த நீலேஷ் காருடன் வேறு ஒரு இடத்திற்கு தங்கச்சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது வீட்டில் வைத்து நிக்லேசும், அவரது நண்பர் அக்ஷயும் பெண் என்ஜினீயரை மிரட்டி கற்பழித்தனர். இது குறித்து அவர் போலீசில் புகார் அளிக்கப்போவதாக கூறினார். இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் பெண் என்ஜினீயரை கழுத்தை நெரித்து கொலை செய்தனர்.
இந்தநிலையில் 2 பேரும் மறுநாள் கோவா செல்லலாம் என நீலேசை காருடன் வர சொன்னார்கள். பின்னர் அவர்கள் காரில் பெண் என்ஜினீயரின் உடலை ஒரு பையில் திணித்து வைத்து ஏற்றினர். கர்நாடக மாநிலம் பெலகாவி அருகே சென்றபோது 2 பேரும், நீலேசுக்கு தெரியாமல் காரில் இருந்த பெண் என்ஜினீயரின் உடலை அங்கு இருந்த கால்வாயில் வீசினர்.
கோவா சென்ற பிறகு நீலேஷ் காரில் இருந்த பை ஒன்று மாயமாகி இருப்பதை பார்த்தார். இது அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் துருவி, துருவி நண்பர்களிடம் விசாரித்தார். அப்போது 2 பேரும் சேர்ந்து பெண் என்ஜினீயரை கற்பழித்து, கொலை செய்து உடலை வீசியதை கூறினர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக போலீசில் சரணடையும்படி அவர்களிடம் கூறினார்.
இல்லையென்றால் போலீசில் புகார் அளிப்பேன் என தெரிவித்தார். இதையடுத்து நிக்லேசும், அக்ஷையும் ரத்னகிரி போலீசில் சரண் அடைந்தனர்.
இதுகுறித்து ரத்னகிரி போலீசார் உடனடியாக அம்பர்நாத் மற்றும் கர்நாடக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து கர்நாடக போலீசார் பெலகாவில் இருந்து 13 கி.மீ. தூரத்தில் கால்வாயில் கிடந்த பெண் என்ஜினீயரின் உடலை மீட்டனர். அம்பர்நாத் போலீசார் நிக்லேஷ் மற்றும் அக்ஷய் மீது கற்பழிப்பு, கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அக்ஷயின் வீட்டில் தடயவியல் நிபுணர்களுடன் சோதனை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் குறித்து கர்நாடக மற்றும் அம்பர்நாத் போலீசார் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவத்தில் நீலேசுக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக அம்பர்நாத் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கற்பழித்து, கொலை செய்யப்பட்ட பெண் என்ஜினீயர் மும்பை விக்ரோலி பகுதியில் தங்கி அலுவலகம் சென்று வந்தார். இவரின் தந்தை நாக்பூரில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.