கார்களுக்கான உலகின் மிகப்பெரிய சந்தையாகத் திகழும் சீனா, பெட்ரோல் மற்றும் டீசல் வேன்கள் மற்றும் கார்களின் உற்பத்தி மற்றும் விற்பனையை தடை செய்யத் திட்டமிட்டு வருகிறது.
இது தொடர்பான ஆய்வுகளைத் தொடங்கி விட்டதாகவும், ஆனால் இந்தத் திட்டம் எப்போது நடைமுறைக்கு வரும் என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அந்நாட்டு தொழில் துறை இணை அமைச்சர் ஷின் குவோபின் கூறியுள்ளார்.
இந்த முடிவு சீன கார் உற்பத்தித் துறையின் முன்னேற்றத்தில் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரும் என்று அவர் கூறியுள்ளதாக சீன அரசின் அதிகாரப்பூர்வ செய்தி முகமையான சின்ஹுவா கூறியுள்ளது.
கடந்த ஆண்டு மட்டும் சீனாவில் 2 கோடியே 80 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது உலகின் ஒட்டுமொத்த கார் உற்பத்தியில் சுமார் மூன்றில் ஒரு பங்காகும்.
சுற்றுச்சூழல் மாசு மற்றும் கரியமில வாயு வெளியேற்றதைக் கட்டுப்படுத்தடீசல் மற்றும் பெட்ரோல் கார் உற்பத்தியை 2040-ஆம் ஆண்டுவாக்கில் நிறுத்தவுள்ளதாக பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் அரசுகள் ஏற்கனவே கூறியுள்ளன.
2019-ஆம் ஆண்டில் இருந்து, தங்கள் நிறுவனத்தின் கார்கள் அனைத்திலும் மின் பொறி இருக்கும் என்று கடந்த ஜூலை மாதம் சீன கார் நிறுவனமான வோல்வோ கூறியுள்ளது.
மற்ற சர்வதேச கார் உற்பத்தி நிறுவனங்களும் மின் ஆற்றலில் இயங்கும் கார்களை சீனாவில் உற்பத்தி செய்வது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகின்றன.
2025-இல் மின் ஆற்றலில் இயங்கும் கார்கள், மற்றும் மின் சக்தியில் இயங்குவதற்கான பொறிகளை உடைய பெட்ரோல் மற்றும் டீசல் கார்கள் ஆகியன தங்கள் நாட்டில் உள்ள கார்களில் குறைந்தது ஐந்தில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளது.
பெட்ரோலிய பொருட்கள் பயன்பாட்டில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது இடத்தில இருக்கும் சீனாவில் இந்த மாற்றம் பெட்ரோலிய பொருட்களின் தட்டுப்பாட்டைக் குறைக்கும் என்று எதிர்பார்க்கிறது.