தெலுங்கானாவில் மாணவியை ஆண்கள் கழிவறையில் நிற்க வைத்த உடற்கல்வி ஆசிரியர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்ட் செய்துள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஒரு பள்ளியைச் சேர்ந்த 11 வயது மாணவியின் பெற்றோர் அம்மாணவியின் சீருடையை துவைத்து காயவைத்துள்ளனர். ஆனால், சீருடை உலராததால் வேறு உடையில் மாணவியை பள்ளிக்கு அனுப்பியுள்ளனர். இதுகுறித்து மாணவியின் டைரியிலும் குறிப்பிட்டுள்ளனர்.
வேறு உடையுடன் வந்த மாணவியிடம் உடற்கல்வி ஆசிரியர் விசாரித்தார். மாணவி நடந்ததை கூறியதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. இதையடுத்து, அந்த மாணவியை மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையில் நிற்க வைத்துள்ளார். இந்த விவகாரம் மாநிலத்தில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சங்காரெட்டி மாவட்ட கல்வி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் அந்த ஆசிரியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், மாணவியை தண்டித்த உடற்கல்வி ஆசிரியர் பிரியங்கா மீது போலீசில் புகார் கொடுத்துள்ளோம். அவர்மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அந்த ஆசிரியரை பணிநீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு உள்ளது என தெரிவித்துள்ளனர்.
மேலும், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என துணை முதல்வர் கடியம் ஸ்ரீஹரி தெரிவித்துள்ளார்.