இயற்கையான பொருட்கள் மீது எப்போதுமே நமக்கு நம்பிக்கை உண்டு. உடலுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று நம்புகிறோம். அதிலும் அழகு என்ற விஷயம் வந்துவிட்டால் இயற்கையான பொருட்களைக் கொண்டே எல்லாம் செய்து கொள்ள வேண்டும், அதிலும் உடனடியாக ரிசல்ட் கிடைக்க வேண்டும் என்று எதிர்ப்பார்ப்போம்.
பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் பாட்டி… பாட்டியின் பாட்டி என நம்முடைய மூதாதையர்கள் அழகுக்காக பயன்படுத்திய பொருட்களைக் கொண்டு இப்போது நீங்கள் மிளிரலாம்.
வேப்பிலை
நோய்த் தொற்றை தவிர்க்க கூடியது. ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் பெரிதும் பயன்படுத்தப்பட்டது. வேப்பிலையை ஒரு கொத்தை அப்படியே தண்ணீரில் போட்டு கொதிக்க வையுங்கள். அதனை குளிக்க பயன்படுத்தலாம். இல்லையெனில் வேப்பிலையை அரைத்து அதனுடன் தயிர் சேர்த்து முகத்திற்கு பேக்காக போடலாம். வேப்பம் எண்ணையைக் கொண்டு முடியின் வேர்க்கால்களுக்கு மசாஜ் செய்திடுங்கள்.இதனால் பொடுகுத் தொல்லை குறைந்திடும்.
குங்குமப்பூ
மற்றதை ஒப்பிடும் போது இது கொஞ்சம் விலை அதிகம் தான். ஆனால் மிகச்சிறந்த பலனை கொடுக்ககூடியது. சில குங்குப்பூவை எடுத்து பாலில் ஊறவைத்திடுங்கள். ஒரு இரவு முழுக்க ஊற வேண்டும். பின்னர் அதனை குழைத்து டேன் உள்ள இடங்களில் அப்ளை செய்து வர நல்ல பலன் கிடைத்திடும்.
தேன்
எளிதாக கிடைக்ககூடியது. பெரும்பாலானோர் வீடுகளில் தேன் இருக்கும். காயம் உள்ள இடங்களில் தேன் தடவினால் அது சிறந்து ஆண்ட்டி செப்டிக் ஏஜண்ட்டாக செயல்படும். வறண்ட சருமம் இருப்பவர்கள் தேனை அப்படி முகத்திற்கு மாஸ்க்காக பயன்படுத்தலாம். பத்து நிமிடங்கள் லேசாக மசாஜ் செய்திடுங்கள்
நெல்லிக்காய்
நெல்லியில் விட்டமின் சி அதிகம். இரண்டு ஸ்பூன் நெல்லிச்சாறை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சம அளவு எலுமிச்சை சாறை சேர்த்து தலையில் தேய்த்துக் கொள்ளுங்கள். ஒரு மணி நேரத்திற்கு பிறகு தலைக்குளிக்கலாம். இதனால் முடி உதிர்வு தவிர்க்கப்படும்.
முல்தானிமெட்டி
இயற்கையான க்ளன்சர் என்று அழைக்கப்படும் இந்த முல்தானிமெட்டியும் மிகவும் எளிதாக கிடைத்திடும். முல்தானி மெட்டி பொடியுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு அல்லது தக்காளிச்சாறு கலந்து முகத்தில் தேய்த்து வர பருக்கள் மறைந்திடும். முல்தானி மெட்டியுடன் தயிர் சேர்த்து முகத்தில் தேய்த்திடுங்கள். வாரம் இரண்டு முறை இப்படிச் செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்திடும்.
மஞ்சள்
நம் சமையலறையில் இடம் பிடிக்கும் பொருள் இது. மஞ்சளுடன் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்து வர சுருக்கங்கள் வராமல் தவிர்க்க முடியும். தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் கலந்து பாதத்தில் பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து வர நல்ல பலன் கிடைக்கும்.
சந்தனம்
சருமத்திற்கு நல்ல ரத்த ஓட்டத்தை கொடுத்திடும். சந்தனத்துடன் ஊற வைத்த பாதாமை அரைத்த விழுது ஒரு ஸ்பூன் மற்றும் பால் ஒரு ஸ்பூன் கலந்து முகத்திற்கு தேய்த்துக் கொள்ளுங்கள். நன்றாக காய்ந்ததும் கழுவி விடலாம்.
துளசி
வீட்டின் முற்றத்தில் பெரும்பாலானோர் துளசி மாடத்தை வைத்திருப்பார்கள். முகத்தில் திட்டு திட்டாக கருப்பு படர்ந்திருப்பவர்களுக்கு சிறந்த மருந்து இது. துளசியை அரைத்த விழுதுடன் சிறிதளவு பால் சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்து வர நல்ல பலன் கிடைக்கும். பற்களில் மஞ்சள் கரை இருந்தால் துளிசியை காய வைத்து பொடியாக்கிக் கொள்ளுங்கள் அத்துடன் ஆரஞ்சு பழத்தோல் காய வைத்து அரைத்த பொடி இரண்டையும் சேர்த்து பற்களில் தேய்த்து வர பற்கள் வெண்மையாகும்.
தயிர்
தினமும் உணவாக பயன்படுத்தும் தயிரினால் தலைமுடிக்கு மிகவும் நல்லது. தயிரில் ஜிங்க் சத்து அதிகமுள்ளது. பாதம் எண்ணெய் மற்றும் ஒரு முட்டையை நன்றாக கலந்து கொள்ளுங்கள். அதனுடன் மூன்று ஸ்பூன் தயிர் சேர்த்து ஒரு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பின்னர் அதனை தலையில் ஹேர் பேக்காக போட்டுக் கொள்ளுங்கள். அரை மணி நேரம் கழித்து குளித்த வர தலையின் வறட்சி குறைந்திடும்.