மத்தியப்பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்த பொறியியல் கல்லூரி மாணவி, தன் புகைப்படத்தை பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் போலியான பேஸ்புக் கணக்கு வைத்திருப்பதாக போலீசில் புகார் அளித்திருந்தார். அந்த பெண் தான் பேஸ்புக் கணக்கு தொடங்க வில்லை எனவும் குறிப்பிட்டிருந்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் போலி கணக்கு தொடங்கியவர் ராய்சன் மாவட்டம் மந்தீப் பகுதியைச் சேர்ந்த சஞ்சய் பட்டேல் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். சஞ்சய் அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. பயின்று வருகிறார். அவர் பெண்ணின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு தொடங்கி மற்ற பெண்களிடம் பேசி வந்துள்ளார். மேலும், பொறியியல் கல்லூரி மாணவியின் புகைப்படத்தை வாட்ஸ்-அப் குரூப்பின் மூலம் பெற்றதாக சஞ்சய் தெரிவித்தார்.
இது போன்று போலியான பேஸ்புக் கணக்குகள் மூலம் பலர் ஏமாற்றப்படுகின்றனர். அதனால் சமூக ஊடகங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவேண்டியது அவசியமானதாகும்.