‘வாட்ஸ் ஆப்’ மற்றும் ஸ்கைப் போன்ற குரல் மற்றும் வீடியோ அழைப்பு செயலிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை செளதி அரேபியா நீக்குகிறது. உற்பத்தி மற்றும் பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
‘இண்டர்நெட் புரோட்டோகாலுக்கான குரல் அணுகல்’ (VoIP) புதன்கிழமையிலிருந்து “பயனாளிகளுக்கு பரவலாக கிடைக்கிறது” என்று செளதி அரேபிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
VoIP செயலிகள் விதிமுறைகளுக்கு இணக்கமாக நடப்பதில் தோல்வியுற்றதற்காக தடை செய்யப்பட்டிருந்தது.
, அல்ஜசீராவை ஸ்னாப்சாட் தடை செய்த சில நாட்களில், பழமைவாத போக்கு கொண்ட வளைகுடா நாட்டில் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
கத்தார் நாட்டை சேர்ந்த அல்ஜசீரா நெட்வொர்க், “தீவிரவாதத்தை ஆதரிக்கும் தீங்கிழைக்கும், பிரசார-அழுத்தம் கொண்ட சேனலாக” இருப்பதாக செளதி அதிகாரிகள் குற்றம் சாட்டினார்கள்.
இந்த குற்றச்சாட்டுகளை மறுக்கும் அல்ஜசீரா, ஸ்னாப்சாட்டின் நடவடிக்கைகள் “உலகம் முழுவதிலும் சுதந்திரமாக சென்று செய்திகளை சேகரித்து வழங்கும் பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களின் உரிமைகள் மீதான தெளிவான தாக்குதல்” என்று கூறுகிறது.
பயங்கரவாதத்திற்கு கத்தார் ஆதரவளிப்பதாகவும் ஈரானுடன் நெருக்கமான உறவு கொண்டிருப்பதாகவும் கூறி அந்த நாட்டுடனான அனைத்து உறவுகளையும் துண்டித்துக் கொள்வதற்கு சற்று முன்னதாக, அதாவது மே மாத இறுதியில் அல்ஜசீரா இணையத்தளத்தை அணுகுவதற்கு, செளதி அரேபியா தடைவிதித்தது.
இருபதுக்கும் மேற்பட்ட முக்கிய மத நபர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள், தூதரக நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து இந்த மாத தொடக்கத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
2011 ல் நடைபெற்ற ‘அரபு எழுச்சி கிளர்ச்சிகளுக்கு’ பிறகு செளதி அரேபியாவில் இணைய கண்காணிப்பு மற்றும் தணிக்கை தீவிரமடைந்தது. இதைத்தவிர, 400,000 வலைத்தளங்களை மக்கள் அணுகுவதைத் தடுப்பதற்காக ஐபி முகவரி-தடுப்புகளை பயன்படுத்துவதாக அதிகாரிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.
2013 ஆம் ஆண்டில் தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு செளதி கம்யூனிகேஷன்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி கமிஷன் (சிஐடிசி), வழங்கிய அறிவுறுத்தல்களில், VoIP தொடர்பான விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டது.
எதுபோன்ற விதிமீறல்கள் செய்யப்பட்டன என்பதை சிஐடிசி கமிஷன் சொல்லவில்லை. ஆனால் “பொது நலனுக்கு தீங்கு விளைவிக்கும் எதிர்மறையான அம்சங்களிலிருந்து சமுதாயத்தை பாதுகாக்க” செயல்படுவதாக அது வலியுறுத்தியது.
தற்போது செளதி அரேபிய மக்களுக்கு VoIP அணுகல் வழங்குவதற்கான முடிவு “ராஜ்ஜியத்தின் இணைய ஒழுங்குமுறைக்கு ஒரு முக்கியமான படி” என்று கூறும் செளதி அரேபிய தகவல் தொடர்பு அமைச்சகம், இது “செயல்பாட்டு செலவினங்களைக் குறைத்து டிஜிட்டல் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும்” என்றும் தெரிவித்துள்ளது.
“செளதி பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான முக்கிய உந்து சக்திகளில் ஒன்று டிஜிட்டல் மாற்றம், ஏனெனில் இது இணைய அடிப்படையிலான வணிகங்களின் வளர்ச்சியை, குறிப்பாக ஊடக மற்றும் பொழுதுபோக்கு துறைகளை ஊக்குவிக்கும்” என்று அமைச்சகம் கூறுகிறது.