உலகின் மிகப்பெரிய உயர் தொழில்நுட்ப நிறுவனங்கள் அமைந்திருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கில் ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணிபுரியும் பெண், தனது கூந்தலுக்கு பழுப்பு வண்ண சாயம் ஏற்றினார். அணிந்திருந்த உயர்ந்த குதிகால் கொண்ட காலணிகளையும், கண்ணில் அணிந்திருந்த காண்டெக்ட் லென்சையும் புறம்தள்ளி, வணிகத்தில் முன்னேறிய ரகசியத்தை வெளிப்படுத்துகிறார்.
வெற்றிகரமான தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றிவரும் எய்லீன் கேரே முப்பதுக்கும் சற்று கூடுதலான வயது கொண்டவர்.
கண்களில் கண்ணாடியும், அடர் பழுப்பு வண்ண கூந்தலுடன் காணப்படும் அவர் எப்போதும் இதே தோற்றத்தில் இருப்பதில்லை.
“மூலதன ஆலோசகரான ஒரு பெண்ணின் ஆலோசனையின்படியே முதல் முறையாக எனது முடிக்கு சாயம் பூசினேன்” என்று கூறுகிறார் எய்லீன் கேரே.
கேரே, தனது தோற்றத்தை இன்னும் வசதியாக கையாள்வதற்கு பொன்னிறத்தை விட அடர் பழுப்பு நிற கூந்தல் உகந்ததாக இருக்கும் என்று முதலீட்டாளர்கள் கூறினார்கள்.
“நிதி திரட்டுவதில் இது நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் என்னிடம் இந்த அறிவுரை கூறப்பட்டது. ஏனென்றால் அடர் பழுப்பு நிற கூந்தல் கொண்ட பெண் தலைமை நிர்வாக அதிகாரிகள் வலுவானவர்களாக அங்கீகரிக்கப்படுவது இங்கு ஒரு முறைமையாக இருக்கிறது” என்று அவர் விளக்குகிறார்.
அங்கீகார முறைமை (Pattern recognition) என்பது மக்களுக்கு பழக்கமான அனுபவங்கள் அல்லது நன்கு அறியப்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் பரிந்துரைக்கும் ஒரு கோட்பாடு. உணரப்பட்ட அபாயங்களை கருத்தில் கொண்டு, அவர்களை வசதியாக உணர வைக்கும் கோட்பாடு இது.
பொன்னிற கூந்தலைக் கொண்டிருந்தபோது, சர்ச்சைக்குரிய தெரோனெஸ் நிறுவனத்தின் எலிசெபத் ஹோம்ஸுடன் ஒப்பிட்டுப் பேசப்பட்டதாக எய்லீன் கேரே கூறுகிறார்.
“பழுப்பு வண்ண கூந்தலை கொண்டிருப்பதால் நான் சற்று முதிர்ந்த தோற்றத்துடன் காட்சியளிப்பது எனக்கு வசதியாக இருக்கிறது, அதுதான் எனக்கு தேவையானதும்கூட. இதை தீவிரமாக எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நான் உணர்ந்தேன்” என்று சொல்கிறார் கேரே.
பன்முகத்தன்மையுடன் மேம்படுத்தப்பட்ட கணினி மென்பொருட்களை பிற நிறுவனங்களுக்கு வழங்கும் ‘கிளாஸ்ப்ரேக்கர்ஸ்’ (Glassbreaker s) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வருகிறார் எய்லீன் கேரே. தனது நிறுவனத்திற்கு பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான நேர்காணலின்போது, தங்களது பொன்நிற கூந்தலை அடர் பழுப்பு வண்ணமாக சாயமேற்றியிருந்த பல பெண்களை அவர் சந்தித்தார்.
“பொன்னிற கூந்தலால் அசெளகரியங்கள் ஏற்படுவது பற்றி நாங்கள் விவாதித்தோம்” என்கிறார் கேரே.
“மது அருந்தகத்திற்கு செல்லும்போது பொன்னிறமானவர்கள் தாக்கப்படுவது சகஜமாக இருக்கிறது. இது பொதுவான பிரச்சனை.”