தமிழ்நாட்டில் இருக்கும் நாயகன் கோகுல், வேலைத்தேடி கேரளாவிற்கு செல்கிறார். அங்கு பழைய இரும்பு கடை நடத்தி வரும் அப்புக்குட்டி கடையில் வேலைக்கு சேருகிறார். இவருடன் நான்கு நண்பர்களும் வேலைப் பார்த்து வருகிறார்கள். கடைக்கு பக்கத்திலேயே வசித்து வரும் நாயகி நீனுவுடன், முதலில் மோதலுடன் ஆரம்பிக்கும் இவர்களது நட்பு பின் காதலாக மாறுகிறது.
இந்நிலையில், தனது ஊருக்கு செல்லும் நாயகன் கோகுல் தன்னுடைய அக்காவுக்கு ஒரு செல்போன் வாங்கிக் கொடுக்கிறார். அந்த செல்போனில் சார்ஜ் போட்டுக்கொண்டே பேசும்போது, எதிர்பாராத விதமாக செல்போன் வெடித்து, கோகுலின் அக்காவிற்கு காது கேட்காமல் போகிறது.
இதை குணப்படுத்துவதற்காக தன் அக்காவை கேரளாவிற்கு அழைத்து வந்து விடுகிறார் கோகுல். அக்காவுடன் சுற்றுவதை பார்க்கும் நாயகி நீனு, கோகுலை தவறாக புரிந்துக் கொண்டு, அவரை விட்டு விலகுகிறார்.
அக்காவின் சிகிச்சைக்காக ஒரு லட்சம் பணம் தேவைப்படும் நிலையில், ஒரு நடனப் போட்டி ஒன்று நடக்க இருக்கிறது. இதில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றாரா? தன் அக்காவின் காதை சரி செய்தாரா? கோகுலின் உண்மை நிலையை அறிந்து நாயகி நீனு ஒன்று சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
நாயகன் கோகுல், இரும்பு கடையில் வேலை செய்துக் கொண்டு சாதாரண இளைஞனாக ஹீரோயிசம் இல்லாமல் நடித்திருக்கிறார். படம் முழுக்க ரசிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி நீனு சாதாரண குடும்பத்து பெண்ணாக நடித்திருக்கிறார். அழகான முகபாவனையால் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். நாயகன் உடனான காதல் காட்சியில் ரொம்ப அழகாக நடித்திருக்கிறார்.
நாயகன் அக்காவாக நடித்திருக்கும் பிரியா மோகன், முதல் பாதியில் கலகலப்பாகவும், இரண்டாம் பாதியில் காது கேட்காமல், ஒரு சீரியசான பெண்ணாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். அப்புக்குட்டி, இரும்பு கடை முதலாளியாக நல்ல மனதுடன் நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். இவருக்கு மனைவியாக சிறிது நேரமே வந்தாலும் மனதில் நிற்கிறார் மதுமிதா.
கேரளா படங்களுக்கு உண்டான எதார்த்தமான பதிவாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் உதய் சங்கரன். கதாபாத்திரங்களிடையே அழகாக வேலை வாங்கி இருக்கிறார். சென்டிமென்ட் காட்சிகளில் நெகிழ்ச்சி ஏற்படுத்தி இருப்பது பாராட்டுக்குரியது. ஒரு சில இடங்களில் திரைக்கதையில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. இதை சரிசெய்திருந்தால் கூடுதலாக படத்தை ரசித்திருக்கலாம்.
நிக்கி கண்ணனின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். அதுபோல், வல்லவன் இசையில் பாடல் அனைத்தும் சிறப்பாகவே இருக்கிறது. பின்னணியிலும் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். குறிப்பாக எல்லா பாடல்களும் கேட்கும் படி அமைந்திருப்பது சிறப்பு.
மொத்தத்தில் ‘கொஞ்சம் கொஞ்சம்’ பார்க்கலாம்.