சியோரா லியோனில் பிறந்து வளர்ந்த “மிரியம்” பள்ளிக்கு சென்றதில்லை. வளர்ந்த பிறகு எழுத படிக்கத் தெரியாமல் சிரமப்பட்டார். அந்த இடத்தில் காரணமில்லாமல் இருந்ததற்காக தான் கைது செய்யப்பட்டதை, வேறு குற்றம் என்று தவறாக புரிந்தார் மிரியம்.
ஆனால், சிறைதான் அவரது முதல் வகுப்பறையாக மாறியது. தான் படிக்கக் கற்றுக் கொண்ட கதையை சிலரின் உதவியுடன் எழுதியிருக்கிறார் மிரியம்.
“நீங்கள் செய்த குற்றம் என்ன? குற்றவாளியா இல்லையா? ”
“என்ன? எனக்கு புரியவில்லை.”
“நீ குற்றவாளியா? பதில் சொல்லுங்கள்.”
“ஆமாம் ஐயா.”
ஒரு வருடம் கழித்து, நான் சியரா லியோனில் உள்ள ஃப்ரீடவுன் பெண்கள் சீர்திருத்த மையத்தில் (Freetown Female Correction Centre) இருந்து விடுவிக்கப்பட்டேன். நான் ஏன் அங்கு இருந்தேன்? குற்றவாளி என்ற வார்த்தை என்னவென்று எனக்குத் தெரியாது என்பதால்! எனக்கு புரியும்படி மொழிபெயர்த்து சொல்ல யாரும் இல்லை.
35 வயதான நான் ஐந்து குழந்தைகளின் தாய். ஒரு பெரிய திருட்டு சம்பவம் தொடர்பாக எனது சுற்றுவட்டாரப் பகுதியில் நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டேன். நாங்கள் அனைவரும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, கல்வியறிவு இல்லாத நான் தவறான வேண்டுகோளை முன்வைத்தேன்.
எனது தண்டனைக் காலம் தொடங்கியபோது, பெண் கைதிகளுக்கு வாரம் இருமுறை வழங்கப்பட்ட வகுப்புகளில் கலந்து கொண்டு எழுதப் படிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்று முடிவுசெய்தேன்.
என்னைப்போலவே, சக சிறைவாசிகள் பலர் கல்வியறிவு இல்லாதவர்களாகவும், பள்ளிக்கூடத்திற்கே செல்லாதவர்களாகவும் இருந்தார்கள்.