முன்னதாக பதிவிடப்பட்ட டுவிட் ஒன்று அம்பலமாகிய பின்னர், “துருக்கி அழகிப் போட்டி 2017” பட்டத்தை வென்ற அழகியிடம் இருந்து அந்த பட்டம் பறிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு துருக்கியில் தோல்வியில் முடிந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை மேற்கோள்காட்டி, தன்னுடைய மாதவிடாய் சுழற்சியை, “தியாகிகள்” சிந்துகிற ரத்தத்தோடு ஒப்பிட்டு, 18 வயதான இதிர் இசென் டுவிட்டர் பதிவிட்டுள்ளார்.
இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தோர் இந்த டுவிட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறி, இதிர் இசென் வெற்றிபெற்றிருந்த சில மணிநேரங்களுக்கு பிறகு, அந்தப் போட்டியில் இருந்து அவரை நீக்கிவிடுகின்ற தங்களுடைய முடிவை உறுதி செய்தனர்.
தான் அரசியல் ரீதியாக அதனை பகிரவில்லை என்று இன்ஸ்டாகிராம் வழியாக இசென் தெரிவித்திருக்கிறார்.
கடந்த ஜூலை 15 ஆம் நாள், துருக்கியில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்ற ஓராண்டு நிறைவின்போது இந்தப் பதிவு இடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற ராணுவ எழுச்சியின்போது நடைபெற்ற சண்டையில் சுமார் 250 பேர் கொல்லப்பட்டனர்.
“ஜூலை 15 ஆம் நாள் தியாகிகள் தினத்தை கொண்டாடுவதற்கு இன்று காலை என்னுடைய மாதவிடாய் வேளையில் இருக்கிறேன். என்னுடைய ரத்தம் வெளியேறுவதில், நம்முடைய தியாகிகளின் ரத்தத்தை பிரதிநிதித்துவப்படுத்தி இந்த நாளை கொண்டாடுகிறேன்” என்று இசென் டுவிட்டர் பதிவிட்டிருந்தார்.
துருக்கி அதிபர் ரசிப் தயிப் எர்துவான் இந்த ஆட்சிக்கவிழ்ப்பிற்கு எதிராக செயல்பட்டு இறந்தோரை வழக்கமாக “தியாகிகள்” என்று குறிப்பிடுவதுண்டு
வியாழக்கிழமையன்று இஸ்தான்புல்லில் இந்த அழகிப் போட்டியின் வெற்றிவிழா நடைபெறும் வரை டுவிட்டர் பதிவு வெளிவரவில்லை என்று இந்தப் போட்டியை ஏற்பாடு செய்வோர் தெரிவித்தனர்.
அதற்கு பிறகு அந்த நிலைமை மற்றும் பதிவை சரிபார்ப்பது என்று நீண்ட கூட்டத்தை இந்த அழகுப்போட்டி ஏற்பாட்டாளர்கள் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அவரது “மிஸ் துருக்கி” பட்டத்தை பறித்துவிடும் அவர்களின் முடிவை அறிக்கை வெளியிட்டு வெள்ளிக்கிழமை அறிவித்தனர்.
“இந்தப் பதிவு இதிர் இசென்னால் டுவிட் செய்யப்பட்டிருக்கிறது என்பதை வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். துருக்கி நாட்டை உலகிற்கு அறிமுகம் செய்வதாலும், நாட்டை பிரதிபலிப்பதற்கு பங்காற்றுவதாலும், இத்தகைய பதிவை ‘மிஸ் துருக்கி அமைப்பு’ ஏற்றுக்கொள்வது சாத்தியமில்லை” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு சமூக ஊடகம் வழியாக இசென் பின்னர் பதில் அளித்துள்ளார்.
இந்தப் பதிவை பகிர்ந்து கொண்டபோது என்னில் அரசியல் நோக்கங்கள் எதுவும் இருக்கவில்லை என்று 18 வயது இளம் பெண்ணாக சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
தான் வெளியிட்ட பதிவு தவறுதலாக புரிந்துகொள்ளப்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டிருந்த அவர், “தாயகத்திற்கும், நாட்டிற்கும் மரியாதை வழங்கும் வகையில் நான் வளர்க்கப்பட்டேன்” என்று மேலும் கூறியிருக்கிறார்.
இந்த சம்பவத்தால், சீனாவில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் துருக்கியின் சார்பாக இந்த அழகிப்போட்டியில் இரண்டாவதாக வந்த அஸ்லி சுமென் கலந்து கொள்ளயிருக்கிறார்.
இத்தகைய அரசியல் சர்ச்சையில் சிக்கிக்கொள்கின்ற முதல் அழகி அல்ல இசென்.
2016 ஆம் ஆண்டு துருக்கி அழகிப் போட்டியில் வென்ற இன்னொரு அழகியான மெர்வி பையுக்சாராக், சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்ட நையாண்டி கவிதையால் அதிபர் எர்தவானை கேலி செய்ததாக, 14 மாதங்கள் இடைநிறுத்தி வைக்கப்பட்ட சிறை தண்டனை பெற்றிருக்கிறார்,
2006 ஆம் ஆண்டு துருக்கி அழகிப் போட்டியை வென்ற மெர்வி பையுக்சாராக், 2015 ஆம் ஆண்டும் சிறுகாலம் கைது செய்யப்பட்டிருந்தார்.
அந்நேரத்தில், துருக்கி அதிபர் எர்துவான், தன்னை கேலி செய்தோருக்கு எதிராக ஆயிரக்கணக்கான வழக்குகளை தொடர்ந்திருந்தார்.
கடந்த ஆண்டு தோல்வியடைந்த ஆட்சிக்கவிழ்ப்புக்கு பிறகு, ஒற்றுமை உணர்வால் தூண்டப்படுவதாக கூறி, இந்த வழக்குகளை எல்லாம் அவர் திரும்ப பெற்றார்.
இருப்பினும், தேசிய பாதுகாப்பிற்காக தேவைப்படுவது என்று அதிபர் கூறுகின்ற நடவடிக்கைகளால் கடும் அடக்குமுறை தொடர்ந்து வருகிறது.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் அரசு பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.