கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய சினிமா ரசிகர்களை தனது இசையால் கட்டிப் போட்டு வைத்திருந்த ‘மெல்லிசை மன்னர்’ எம்.எஸ்.விஸ்வாதன் நேற்று அதிகாலை காலமானார். அவரது உடல், அவரது சொந்த இல்லம் அமைந்துள்ள சாந்தோமில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. இன்று காலை இறுதி சடங்கு நடக்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று காலை முதலே, மறைந்த எம்.எஸ்.வி.யின் உடலுக்கு ரஜினி, பிரபு, பி.சுசீலா, ஏவிஎம் சரவணன் உள்ளிட் சினிமா பிரமுகர்களும், மு.க.ஸ்டாலின், தொல்.திருமாவளவன், தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து, இன்று காலை 9 மணியில் இருந்து எம்.எஸ்.வியின் உடலை நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தது. சரியாக 10 மணியளவில் அவரது இறுதி ஊர்வலம் சாந்தோமில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து தொடங்கியது. அங்கிருந்து கடற்கரை சாலை வழியாக பெசன்ட் நகர் மின்மாயனத்தை அடைந்து, அங்கு அவரது உடலை நல்லடக்கம் செய்கின்றனர்.
எம்.எஸ்.வி.யின் இறுதி ஊர்வலத்தில் ‘இயல் இசை’ குழுவினர் எம்.எஸ்.வியின் காலத்தால் மறக்கமுடியாத பாடல்களை வழிநெடுக பாடியபடி அவருக்கு இசை அஞ்சலி செலுத்தினர். மேலும், எம்.எஸ்.வியின் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும், லட்சக்கணக்கான பொதுமக்களும் இந்த இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர்.