கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பில்லி, சூனியம் வைப்பது,. மாந்த்ரீகம், பேய் ஒட்டுதல் என்ற பெயரில் ஒருவரை தாக்குவது போன்றவற்றை தடை செய்யும் விதமாக சட்டம் கொண்டு வரப்படும் 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே சித்தராமையா கூறியிருந்தார்.
நீண்ட இழுவைக்கு பின்னர் இந்த சட்டம் வரும் நவம்பர் மாதம் கூட உள்ள சட்டசபையில் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதாபிமானத்திற்கு எதிராக உள்ள பேய் ஓட்டுதல் மற்றும் மாந்த்ரீகத்தை நீக்குதல் என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த சட்டம் அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறும் என அம்மாநில காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை மாற்றுவதாக கூறி ஏமாற்றுதல், பெண்களை நிர்வானப்படுத்தி சித்ரவதைகள் செய்தல், எச்சில் இலைகள் மீது அங்கப்பிரதட்சனம் செய்தல் ஆகியவற்றை தடை செய்வது ஆகியவை இந்த சட்டத்தில் உள்ளடங்கியுள்ளன.
இந்த சட்டத்திற்கு மூடநம்பிக்கைகளுக்கு எதிரானவர்கள் வரவேற்பு அளித்துள்ளனர். மக்களை முட்டாள்களாக்கும் இது போன்ற செயல்கள் முற்றிலும் அழிக்கப்பட வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.