உலகிலேயே முதன்முறையாக, மனித கருக்களில் ஏற்பட்டுள்ள நோயை அகற்றுவதற்குரிய துல்லியமான “இரசாயன அறுவை சிகிச்சை” மேற்கொள்ளப்பட்டுள்ளது என சீன ஆராய்ச்சியாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
சன் யாட் சென் பல்கலைக்கழகத்தில் உள்ள ஒரு குழு முன்னூறு கோடி ‘எழுத்துக்களைக்’ கொண்ட மரபணு குறியீட்டில் இருந்த ஒற்றைப் பிழையை சரிசெய்வதற்காக ‘அடிப்படையைத் திருத்துதல்’ என்று பொருள்படும் ‘பேஸ் எடிட்டிங்’ என்ற ஒரு நுட்பத்தை பயன்படுத்தியுள்ளது.
ஆய்வத்தில் உருவாக்கப்பட்ட கருக்களில் இருந்து பீட்டா-தலசீமியா என்னும் ரத்தத்தில் ஏற்படும் மரபுவழி நோயை அவர்கள் அகற்றினர். அந்த கருக்கள் யாருடைய உடலிலும் செலுத்தப்படவில்லை.
மருத்துவத்துறையில் இந்த அணுகுமுறை பின்வரும் காலங்களில், பல்வேறு மரபுவழி நோய்களின் சிகிச்சைக்கு வழிவகுக்கும் என்று அந்தக் குழு கூறுகிறது.
இந்த பேஸ் எடிட்டிங் முறை டி.என்.ஏவின் நான்கு தளங்களான அடினைன், சைட்டோசைன், குவானைன் மற்றும் தைமைன் ஆகிய நான்கு அடிப்படை கட்டுமானக் கூறுகளை மாற்றியமைக்கிறது.
அவை நான்கும் முறையே A, C, G மற்றும் T என்ற ஆங்கில எழுத்துக்களில் குறிக்கப்படுகின்றன.
மனித உடலை கட்டமைக்க மற்றும் இயக்குவதற்கான அனைத்து வழிமுறைகளும் அந்த நான்கு கூறுகளின் இணைப்பில் குறியிடப்பட்டுள்ளன.
மனித உயிரை அச்சுறுத்த கூடிய ரத்தத்தில் உண்டாகும் நோயான பீட்டா-தலசீமியா, மரபணு குறியீட்டின் ஒற்றைப் புள்ளியில் நிகழும் அடிப்படை மாற்றத்தால் ஏற்படுகிறது.
சீனாவை சேர்ந்த குழு அதனை மாற்றியமைத்துள்ளனர். அவர்கள் டி.என்.ஏ-வை ஸ்கேன் செய்து அதிலுள்ள பிழையை கண்டறிந்து குவானைனை அடினைனாக மாற்றி, பிழையைச் சரி செய்தனர்.
“பேஸ் எடிட்டிங் முறை மூலம் மனித கருவில் உள்ள மரபுவழி நோயை குணப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள்தான் முதன் முதலில் செய்துகாட்டியுள்ளோம்,” என இதில் பங்கேற்ற ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான ஜின்சு ஹுவாங் பிபிசியிடம் கூறினார்.
அவர்களுடைய இந்த ஆய்வு நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், பீட்டா-தலசீமியாவுடன் குழந்தைகள் பிறப்பதை தடுப்பதற்கும், மற்றும் பிற மரபுவழி நோய்களைத் தடுப்பதற்கும் கூட புதிய வழியை உருவாக்கியுள்ளது என்றும் அவர் கூறினார்.
ரத்தத்தில் குறைபாடுகள் உள்ள நோயாளிகள் மற்றும் குளோனிங் மூலமாக உருவாக்கப்பட்ட மனித கருக்களிலும் இருந்து எடுக்கப்பட்ட திசுக்களில் இந்த பரிசோதனைகள் செய்யப்பட்டன.
ஏற்கனவே அறிவியலில் பெரும் புரட்சியை ஏற்படுத்திவரும் கிரிஸ்பர் (CRISPR) எனும் மரபணுக்களைத் திருத்தும் தொழில்நுட்பத்தின் ஒரு முன்னேறிய நிலையாக பேஸ் எடிட்டிங் உள்ளது.
கிரிஸ்பர் டி.என்.ஏக்களை உடைக்கிறது. மேலும் உடல் டி.என்.ஏவில் ஏற்பட்ட அந்த முறிவை சரிசெய்ய முயற்சிக்கும் போது, குறைபாடுகள் உடைய மரபணுக்களை செயலிழக்க செய்கிறது. இது புதிய மரபுவழித் தரவுகளை உடலில் உட்செலுத்துவதற்கான வாய்ப்பாகும்.
இந்த பேஸ் எடிட்டிங் தொழில்நுட்பம் டி.என்.ஏக்களின் அடிப்படைக்கு கூறுகள் தாங்களே ஒன்று மற்றொன்றாக மாறும் வகையில் செயல்படுகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவம் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் லியு, இதை ஒரு “ரசாயன அறுவை சிகிச்சை” அணுகுமுறை என்று விவரிக்கிறார்.
அவர் இந்த முறையானது மிகவும் ஆற்றலுடையது மட்டுல்லாமல் கிரிஸ்பர் தொழில்நுட்பத்தைவிட குறைவான தேவையற்ற பக்க விளைவுகளைக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்.
மனித மரபணு வகைகளில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு ஒன்று அல்லது ஒரு சில மரபணுக்களின் வரிசைகளை மட்டும் மாற்றியமைக்கும் நோயுடன் தொடர்புடையதாகும் என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
“எனவே பேஸ் எடிட்டிங் நோய்க் கிருமிகளால் உண்டாகும் மரபியல் மாற்றங்களை நேரடியாக திருத்த அல்லது ஆராய்ச்சி நோக்கங்களுக்காக இனப்பெருக்கம் செய்யக்கூடிய திறன் பெற்றதாகும்,” என்கிறார் அவர்.
சன் யட்-சேன் பல்கலைக் கழகத்தின் இந்த ஆராய்ச்சிக் குழு, மனித கருக்கள் மீது கிரிஸ்பர் தொழில்நுட்பத்தை முதன் முதலாகப் பயன்படுத்தியதன் மூலம் தலைப்பு செய்திகளில் இடம்பெற்றது.
லண்டனில் உள்ள ஃபிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிட்யூட்டின் பேராசிரியரான ராபின் லோவெல்-பேட்ஜ், இந்த சமீபத்திய ஆய்வுகளின் பகுதிகள் “அறிவார்ந்தவை” என்று விவரித்தார்.
ஆனால் அவர்கள் விலங்குகளின் மீது இந்த ஆராய்ச்சியை செய்யாமல் நேரடியாக மனித கருக்களில் இதனை பயன்படுத்தியது என்றும் கேள்வி எழுப்பினார் மற்றும் மற்ற நாடுகளில் கருக்கள் மீது நட்த்தப்படும் ஆய்வுகளுக்கான விதிகள் மிகவும் கடுமையானவை என்று கூறினார்.
புரோட்டீன் அண்ட் செல் என்ற இணைய பக்கத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் மனித டி.என்.ஏவை கையாள விஞ்ஞானிகளின் விரைவான வளர்ச்சியின் சமீபத்திய உதாரணம் இது என்று கூறப்பட்டுள்ளது.
இது நோய் தடுக்கும் முயற்சிகளில் ஏற்றுக் கொள்ளத்தக்கது எது என்பது பற்றி ஆழ்ந்த நெறிமுறை மற்றும் சமூக விவாதத்தை தூண்டுகிறது.
இது குறித்து பேராசிரியர் லவ்ல்-பேட்ஜ் “இந்த அணுகுமுறைகள் வெகுவிரைவில் மருத்துவ ரீதியாக பயன்படுத்த சாத்தியமற்றவை” என்று கூறினார்.
“நெறிமுறைகளை மூடிமறைப்பதற்கும், இந்த அணுகுமுறைகளை எவ்வாறு ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதற்கும் இன்னும் கூடுதலான விவாதம் இருக்க வேண்டும்.”
“இது தொடர்பாக சீனா உட்பட பல நாடுகளில் ஒழுங்குமுறை, மேற்பார்வை மற்றும் நீண்ட காலம் பின்தொடர்ந்து கண்காணித்தல் ஆகியவற்றுக்கு வலுவான வழிமுறைகள் நிறுவப்படவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.