காலா என்ற கரிகாலன் படத்துக்கான கதை மற்றும் தலைப்பு தன்னுடையது என்றும், இந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி சென்னை 4-வது பெருநகர சிவில் கோர்ட்டில் ராஜசேகரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் காலா படத்தை தயாரிக்கும் வொண்டர்பார் நிறுவனம் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்திருந்தது. அதில், ‘மனுதாரர், கரிகாலன் என்ற தலைப்பைத்தான் தென்னிந்திய திரைப்படவர்த்தக சபையில் பதிவு செய்து இருந்தார். அந்த தலைப்பையும் அவர், 2006-ம் ஆண்டுக்கு பின்னர் புதுப்பிக்காததால் காலாவதியாகி விட்டது. காலா என்ற தலைப்பை தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் கவுன்சிலில் நாங்கள் பதிவு செய்துள்ளோம். இந்த வழக்கை காப்புரிமை சட்டத்தின் கீழ் ஐகோர்ட்டில் தான் தாக்கல் செய்ய முடியும். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டிருந்தது.
நேற்று அந்த வழக்கு நீதிபதி இளங்கோவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘நாங்கள் இந்த வழக்கை காப்புரிமை சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யவில்லை. எங்கள் மனுவில் காப்புரிமை குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. திரைப்பட சங்கத்தில் பதிவு செய்ததன் அடிப்படையில் தான் வழக்கை தொடர்ந்துள்ளோம். எனவே, இந்த வழக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டியது இல்லை’ என்றார்.
இதற்கு பதில் அளிக்க ரஜினி தரப்பில் ஆஜரான வக்கீல் அவகாசம் கேட்டார். இதைதொடர்ந்து வழக்கின் விசாரணையை நீதிபதி நாளை(6-ந் தேதி) தள்ளிவைத்தார்.