டெல்லியின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் 1-ம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவி, நேற்று முன்தினம் கழிவறைக்கு சென்று விட்டு உதவிக்காக பெண் உதவியாளர் ஒருவரை அழைத்தார். அப்போது ராகேஷ் என்ற மற்றொரு ஊழியர் கழிவறைக்கு சென்று அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.
மாலையில் வீட்டுக்கு சென்ற அந்த சிறுமி பள்ளியில் நடந்தது குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் இது குறித்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ராகேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டெல்லி அருகே குர்கானில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வந்த 7 வயது சிறுவன் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் சமீபத்தில் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளையும் சி.பி.எஸ்.இ. வாரியம் அறிவித்து இருந்தது.
இந்த அதிர்ச்சி விலகுவதற்குள் மற்றொரு பாலியல் தொல்லை சம்பவம் நடந்திருப்பது டெல்லியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.