முன்னாள் பாலியல் தொழிலாளியான சப்ரீனா வைலிஸ் இன்னாள் பெண்ணுரிமைப் போராளி. நியூசிலாந்தில் பாலியல் தொழில் குற்றப்பட்டியலில் இருந்து நீக்கப்படவேண்டும் என்று போராடியவர் சப்ரீனா.
ஆனால் அவரது கோரிக்கை நிறைவேற்றப்பட்ட சூழ்நிலையில் தற்போது மனம் மாறிவிட்டார் சப்ரீனா.
பாலியல் தொழிலாளியான பெண்களை பயன்படுத்தும் ஆண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற கோரிக்கையை அவர் தற்போது முன் வைக்கிறார்.
சப்ரீனாவின் 12 வயதாக இருந்தபோது, அவரது அப்பா தற்கொலை செய்து கொண்டு இறந்த பிறகு வாழ்க்கையே தடம் புரண்டது.
இரண்டு ஆண்டுகளில் தாய் மறுமணம் செய்து கொள்ள, அவரது குடும்பம் ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்தில் வெலிங்டன் நகருக்கு இடம் பெயர்ந்தது. ஊர் மாறியதும் சப்ரீனாவின் வாழ்க்கையும் மாறியது.
சப்ரீனாவிடம் நேரிடையாக உரையாடிய எழுத்தாளர் ஜூலி பிந்தல், சப்ரீனாவின் கோணத்தில் அவரது வாழ்க்கையைக் கூறுகிறார்.
இளம் பருவத்தில் நான் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. எனது மாற்றுத் தந்தை மிகவும் கொடுமைக்காரர். அந்நாட்களில், என்னிடம் பேசுவதற்குக் கூட ஆளில்லாமல் தவித்தேன்.
தொழில் முறை நடனக் கலைஞராக விரும்பிய நான், பள்ளியில் மதிய உணவு இடைவேளையில் பாலே நடன வகுப்பில் சேர்ந்தேன். லிம்ப்ஸ் என்ற பிரபல நடனக்குழு எனக்கு நடனம் கற்றுக் கொடுத்தது.
பாலியல் தொழில் சட்டபூர்வமான தொழில் என அனுமதித்த ‘பாலியல் தொழில் சீர்திருத்த சட்டம்’, பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்த பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் சட்டம் என்று புகழ்பெற்றது.
இங்கிலாந்தில், உள்துறை விவகாரங்களை நிர்வகிக்கும் குழு, பாலியல் தொழிலைப் பற்றி பல்வேறு அணுகுமுறைகளுடன் ஆலோசனை செய்தது.
அதில் குற்றப்பட்டியலில் இருந்து பாலியல் தொழிலை நீக்குவதும் ஒரு அம்சமாக இருந்தது.
ஆனால் நியூசிலாந்தில் இது ஒரு பிரச்சனையாகிவிட்டது, இந்த சட்டத்தால் தரகர்களும், வாடிக்கையாளருமே பயனடைந்தார்கள்.
இந்தச் சட்டம், பெண்களுக்கு அதிக நன்மைகளையும் உரிமைகளையும் வழங்கும், பெண்கள் அதிகாரம் பெறுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் நடந்ததோ நேர் எதிராக இருந்தது.
இந்த சட்டத்தின்படி, பாலியல் தொழில் செய்யும் பெண்களின் முதலாளி, வாடிக்கையாளர்களுடன் “அனைத்தையும் உள்ளடக்கிய” ஒப்பந்தங்களை செய்துகொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையைக் கொடுத்து, பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்ணை எப்படி வேண்டுமானாலும் தனது விருப்பப்படி கையாளலாம்.
“அனைத்தையும் உள்ளடக்கிய” என்ற அம்சம் சேர்க்கப்படாது என்று எங்களுக்கு முன்னர் உறுதியளிக்கப்பட்டிருந்தது. ஏனென்றால், எதுபோன்ற பாலியல் சேவைகளை வழங்குவது அல்லது மறுப்பது மற்றும் விலை நிர்ணயம் செய்வது போன்றவற்றை பாலியல் தொழிலில் ஈடுபடும் பெண்கள் செய்யமுடியாது என்பதே “அனைத்தையும் உள்ளடக்கிய” என்பதன் பொருள்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்கள் பாதிக்கப்படக்கூடாது, அவர்களுக்கு உரிமைகளும் அதிகாரங்களும் தேவை என்பதுதான், குற்றப்பட்டியலில் இருந்து பாலியல் தொழிலை நீக்கும் கோரிக்கையின் அடிப்படையே.
ஆனால், அந்த அடிப்படைப் பாதுகாப்பையே இந்தச் சட்டம் வழங்கவில்லை.
நாற்பது வயதில் வெலிங்டனில் பாலியல் தொழில் நடத்தும் ஒரு விடுதியில் வேலை தேடிச் சென்ற எனக்கு அதிர்ச்சி ஏற்பட்டது.
அங்கு முதல் முறையாக பணிக்கு சென்றபோது, ஒரு அறையில் இருந்து ஒரு பெண் பயந்து போய் அழுதுகொண்டு ஓடிவந்தாள். அவளால் பேசவே முடியவில்லை. காரணத்தை விசாரிக்காமல், திரும்பி வேலைக்கு செல் என்று அங்கிருந்த வரவேற்பாளர் கூச்சலிட்டார்.
அதிர்ச்சியடைந்த நான், என்னுடைய பொருட்களை எடுத்துக்கொண்டு திரும்பிவிட்டேன். வெலிங்டன் புராஸ்டிட்யூட்ஸ் கலெக்டிவ் அமைப்பிடம் இதுபற்றி பேசினேன். இதில் நாம் என்ன செய்யமுடியும்? இதுபோன்ற கொடுமைகளில் இருந்து பெண்களை பாதுகாக்க என்ன செய்யலாம்? என்று பேசினேன்.
என்னுடைய கேள்வி முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது. அதன்பிறகு அதுவரை எனக்கு ஆதரவு கொடுத்து வந்த ஒரே அமைப்பாக இருந்த புராஸ்டிட்யூட்ஸ் கலெக்டிவ் அமைப்பில் இருந்து விலகிவிட்டேன்.
செல்வதற்கு எந்த இடமும் இல்லாமல் நிர்கதியாகத் தனித்து நின்றேன். இந்தத் தொழிலுக்கும், அந்த அமைப்பிற்கும் நானாகவே விரும்பித்தான் சென்றேன் என்றாலும், அந்த அமைப்பில் இருந்துதான் என்னுடைய தொழிலைத் தொடங்கினேன்.
நியூசிலாந்து புராஸ்டிட்யூட்ஸ் கலெக்டிவ் அமைப்பில் செய்தி ஊடகக் காட்சிகளைக் சேகரிப்பதும் என்னுடைய வேலைகளில் ஒன்றாக இருந்தது. அங்கு நான் படித்த ஒரு விடயம் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
பாலியல் தொழிலில் இருந்து வெளியேறிய ஒருவர் காரணமின்றிக் கண்ணீர் விடுவதைப் பற்றிய செய்தி அது. பாலியல் தொழிலில் இருந்து வெளியேறும்வரை அந்த உணர்வு எப்படி இருக்கும் என்பதை அவர்கள் உணரவில்லை.
காரணமே இல்லாமல் இந்த செய்தி அடிக்கடி என் மனதில் தோன்றும். என்னைப்போலவே அவரும் உணர்ந்திருக்கிறார் என்பது மிக தாமதமாகவே எனக்கு புரிந்தது. அதன்பிறகு நான் பாலியல் தொழிலில் ஈடுபடவேயில்லை.
பாலியல் தொழிலில் இருந்து 2011ஆம் ஆண்டில் விலகிய நான், புதிய வாழ்க்கையை துவங்கும் முடிவில் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டுக்கு சென்றுவிட்டேன். ஆனால் குழப்பமும், மன அழுத்தமும் என்னை வாட்டின.
எனது அண்டை வீட்டில் இருப்பவர், இணையதளத்தில் வெப்கேமரா மூலம் பாலியல் தொழில் செய்வதற்கு அழைப்பு விடுத்தபோது, அதை கண்ணியமாக மறுத்துவிட்டேன்.
நான் பாலியல் தொழிலாளி என்று என் நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறதா என்ன?
என்னைப் பற்றி இவருக்கு எப்படி தெரிந்தது என்று ஆச்சரியமடைந்தேன்.
கோரிக்கையை மறுத்த பிறகு அண்டை வீட்டுக்காரர் என்னை பார்க்கும்போதெல்லாம் அவமானப்படுத்துவார்.
பெண்ணாக இருப்பது மட்டுமே இப்படி கூப்பிடுவதற்கு போதுமான காரணம் என்றும் புரிந்துக்கொண்டேன்.
பெண்களையும், பெண்ணியவாதிகளையும் ஆன்லைனில் சந்தித்து உரையாடுகிறேன். பாலியல் தொழிலில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அடிமைகளாக நடத்தப்படுபவர்களுக்காக பணிபுரிகிறேன்.
பாலியல் தொழிலில் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுத்துவரும் பிரிட்டனின் உள்விவகாரத்துறையின் குழு, பாலியல் தொழில் தரகர்களை குற்றவாளிகள் பட்டியலிலும், தொழிலாளிகளை குற்றவாளிகள் அல்ல என்றும் வகைப்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரேலியாவில் பெண்ணியவாதிகள் கொண்ட குழுவை நிறுவியிருக்கிறேன்.
ஒரு மாநாட்டிற்கும் ஏற்பாடு செய்தேன்.
ஆஸ்திரேலியாவில் பல மாநிலங்கள் பாலியல் தொழிலை சட்டப்பூர்வமாக்கியுள்ள நிலையில் முதலாவது அடிமை எதிர்ப்பு நிகழ்வாக கடந்த ஆண்டு மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டை கூறலாம்.
1980களின் மத்தியிலேயே பாலியல் தொழிலுக்கு சட்டப்பூர்வ தொழில் என்ற அந்தஸ்து வழங்கப்பட்டபோதிலும், அதற்கு எதிர்ப்புகளும் தொடர்கின்றன.
பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் நன்மைக்காக செயல்படத் தொடங்கியபோது, என்னுடைய புதிய வாழ்க்கை தொடங்கிவிட்டதை உணர்ந்தேன்.
இதனால் உணர்வு சிக்கல்களில் இருந்து வெளியேறிய நான், இப்போது உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் வலுவாகிவிட்டேன்.
ஆனால், அதிர்ச்சியளிக்கும் சம்பவத்திற்கு பிறகு ஏற்படும் மன உளைச்சல் (Post-traumatic stress disorder) நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன் என்பதை மருத்துவ பரிசோதனைகள் தெரிவித்தன.
பாலியல் தொழிலின் பரிசு நோய். அந்தத் தொழிலில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட அழுத்தங்களை எல்லாம் அழுத்தி வைத்திருந்ததன் விளைவுகள் அந்த நோய்கள். பின்விளைவாக ஏற்பட்ட நோயில் இருந்து மீண்டு வருவதற்காக போராடிவருகிறேன்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபடுவதும், என்னைப்போன்றே இந்த பணியில் ஈடுபட்டிருப்பவர்களுடன் இணைந்து பணியாற்றுவதுமே எனது நோய்க்கான சிறப்பான சிகிச்சையாக இருக்கும் என்று நம்புகிறேன்.
இந்தத் தொழிலில் ஈடுபட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காமல் மெளனம் காப்பவர்களுக்கு எதிராகவும் குரல் எழுப்புகிறேன்.
பாலியல் தொழிலில் ஈடுபடுங்கள் என்று ஊக்கமளிப்பதோ, இந்தத் தொழிலில் இருந்து வெளியேறுங்கள் என்று அறிவுறுத்துவதோ என் நோக்கம் அல்ல. பிற பெண்களுக்கு உதவுவதற்காக என்னால் முடிந்தவற்றை செய்யவேண்டும் என்பதே என்னுடைய நோக்கம்.
‘த பிம்பிங் ஆஃப் பிராஸ்டிட்யூஷன்: அபாலிஷிங் த செக்ஸ் வொர்க் மித்’ (The pimping of prostitution: Abolishing the Sex Work Myth) என்ற புத்தகத்தை எழுதியவர் ஜூலி பிந்தல்.