‘ஜல்லிக்கட்டு 5-23 ஜனவரி 2017’ என்ற படத்தின் படப்படிப்பு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடைப்பெற்றதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான, அஹிம்சா கூறியுள்ளது.
இப்படப்பிடிப்புதான், ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் நடந்திருக்கும் முதல் இந்தியத் திரைப்படத்தின் படப்பிடிப்பு என்று அது கூறுகிறது.
அத்திரைப்படத்தை சந்தோஷ் இயக்குகிறார்.
அந்த திரைப்படம் குறித்து அது வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த திரைப்படத்தின் கதையானது தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைப்பெற்ற ஜல்லிக்கட்டு தடைக்கு எதிரான எழுச்சியையும், அது தொடர்பான போராட்டங்களையும் அடிப்படையாக கொண்டது என்று கூறப்பட்டுள்ளது.
படப்பிடிப்பு குழு, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தேர்வுக் குழுவிடம் இந்த திரைப்படத்தின் கதையை கருவை அளித்தது. திரைப்படத்துக்கான கருவைப் பாராட்டிய பல்கலைக்கழக குழு, படப்பிடிப்புக்கு உடனடியாக ஆதரவளித்ததாக, அந்த செய்தி அறிக்கை கூறுகிறது.
மேலும் அந்த அறிக்கை, மூன்று நூற்றாண்டுகளாக ஜான் எஃப் கென்னடி, அல் கோர், பராக் ஒபாமா உள்ளிட்ட பல ஆளுமைகளை உருவாக்கிய இந்த பல்கலைக்கழகத்தில் படப்பிடிப்பு நடத்திய முதல் இந்திய திரைப்படம் இதுவாகும் என்று கூறுகிறது.
திரைப்பட நடிகர் கமலஹாசன் உரை நிகழ்த்திய வளாகத்தில், இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது.
இதற்கு முன், அந்த பல்கலைக்கழக வளாகத்தில் `குட் வில் ஹண்ட்டிங், சோஷியல் நெட்வொர்க், மற்றும் தி கிளாசிக் லவ் ஸ்டோரி ஆகிய விருது பெற்ற திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைப்பெற்றுள்ளது.
இது தொடர்பாக நம்மிடம் பேசிய திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், “ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் மட்டும் அல்ல, உலகின் பல்வேறு பகுதிகளில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பினை நடத்தி இருக்கிறோம். குறிப்பாக, உலகில் முதன்முறையாக காளையை வீட்டு விலங்காக பயன்படுத்தியதாக நம்பப்படும் கென்யாவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி உள்ளோம். அதில் சுவாரஸ்யமான செய்தி என்னவென்றால், அந்த நாட்டில் உள்ள ஒரு வகையான காளையின் ஜீனும் நம் காங்கேயம் காளையின் ஜீனும் ஒரே மாதிரியானதாக உள்ளது. இது குறித்தெல்லாம் இந்த திரைப்படம் பேசும்.” என்றார்.
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் ஜல்லிக்கட்டை சென்னையில் நடத்தும் முயற்சியில் இருக்கிறோம். அந்நிகழ்வில் இத்திரைப்படம் வெளியாகும், என்றார் அவர்.